நான் இனி நட்சத்திரமல்ல உங்கள் வீட்டின் குத்துவிளக்கு - திருச்சியில் பெண்களை கவர்ந்த கமல்ஹாசன்
நான் இனி நட்சத்திரமல்ல உங்கள் வீட்டின் குத்துவிளக்கு என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திருச்சியில் கமல் பிரச்சாரம் செய்த போது மேளம் கொட்டி தொண்டர்கள் ஆர்பரித்தனர்.
திருச்சி: நான் இனி நட்சத்திரமல்ல உங்கள் வீட்டின் குத்துவிளக்கு என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் அமைக்கும் ஆட்சியில் மக்கள் கணக்கு கேட்கலாம் என்றும் தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அமைக்கும் ஆட்சியில் சி.பி.ஐ. சோதனை நடத்த தேவை இல்லை என்றும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான, 3ஆம் கட்ட பிரசாரத்தை, கமல்ஹாசன் திருச்சியில் தொடங்கினார். சிந்தாமணி அண்ணா சிலை அருகே பேசும் போது, தமிழகத்தில் புதிய ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று நீங்களும் நம்புவது, எனக்கு புரிகிறது. சில கூட்டங்களில், அமைச்சர்களே முன்னின்று ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்து கூட்டம் சேர்க்கின்றனர். ஆனால், இது நேர்மையாக சேரும் கூட்டம் என்று மேளம் கொட்டி, மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம் என்றார்.
சினிமா நட்சத்திரம் வந்தால், கூட்டம் கூடும் என்று சிலர் பேசுகின்றனர். நான் இனிமேல், சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறு விளக்கு. அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன் என்று சொன்ன போது பெண்கள் ஏராளமானோர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
நாளை நமதே
கூட்டத்தில் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், இந்த ஊழல் காற்றில் அந்த விளக்கு எரிந்து கொண்டேயிருக்க வேண்டிய எல்லா பாதுகாப்பையும் நீங்கள்தான், எனக்கு வழங்க வேண்டும். இந்த ஊழல் காற்று ஓய்ந்தே தீரும், இல்லாவிட்டால் ஓய்ப்போம் என்று கூறினார். ஊர் கூடி தேர் இழுத்தால், நாளை நமதே, நிச்சயம் நமதே. தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகி விட்டது என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டமே சாட்சி.
நல்லவர்களுக்கு ஓட்டு
மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது, எல்லோருமே மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் உங்கள் கடமை, ஓட்டு உங்கள் உரிமை. அதை, நல்லவர்களுக்கு போட வேண்டும். நல்ல ஆள் என்பதற்கான முதல் தகுதி, நேர்மையானவராகவும், உங்கள் கஷ்ட நஷ்டங்கள் புரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இளைஞர் கையில் உள்ளது
நல்ல நதிகளை எல்லாம் சாக்கடையாகவும், ஆற்றுப் படுகைகளை எல்லாம் கொள்ளையடிக்கும் பேங்காகவும் வைத்திருப்பவர்கள் களையப்பட வேண்டும். அரை நூற்றாண்டுகளாக அவர்கள் செய்தவற்றை மாற்றும் பலம் உங்கள் கையில், முக்கியமாக இளைஞர்கள் கையில் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் நினைத்தால், அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார் கமல்ஹாசன்.
கொள்ளையை தடுப்போம்
முன்னதாக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தனியார் ஓட்டலில் நடந்த சிறு குறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தை மாற்றி அமைக்கும் வேலையை நான் மட்டும் செய்து விட முடியாது. அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். நீங்கள் அசட்டையாக இருந்தால் கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும். ஆட்சியாளர்கள் கொள்ளையில் துளிர்த்து போய்விட்டார்கள். அவர் இப்படி துளிர்க்கவேண்டும் என்பதற்காக இலையை வைக்கவில்லை.
காசு கொடுக்க மாட்டோம்
தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்த மக்கள் நீதி மய்யம் சிறப்பான திட்டங்களை வைத்து இருக்கிறது. நாங்கள் யாருக்கும் காசு கொடுப்பது இல்லை. ஆனாலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது. மக்கள் விரும்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எல்லோரது மனதிலும் தோன்றி விட்டது. இனி அதனை செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி.
நேர்மையான ஆட்சி
தேர்தலை எவ்வளவு தள்ளி போட்டாலும் சரி, முன்னாடி கொண்டு வந்தாலும் சரி நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்ற பட்டியலை நாங்கள் தயாரித்து வைத்து இருக்கிறோம். தமிழகத்தை ஒரு டிரிலியன் எக்கானமி மாநிலமாக மாற்றவேண்டும் என்பது கனவு அல்ல. எங்கள் திட்டம். இப்போது இருப்பதை விட 4 மடங்கு வளர்ச்சி அடைய நேர்மையான ஆட்சி அமைப்போம்.
வெளிப்படையான டெண்டர்
ஒற்றை சாளர முறையில் காகிதம் இல்லாத திறந்தவெளி டெண்டர் விடுவோம். சிறு நகரங்களில் தொழில் அபிவிருத்தி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம்.
மூலப்பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.தொழிற்பேட்டைகளை சிறு நகரங்களில் கூட அமைப்போம்.
திட்டம் என்ன
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வர்த்தக மையங்களை அமைப்போம். உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களை கொண்டு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுப்போம். நீங்கள் எல்லோரும் எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்பதற்காக நான் இ்ங்கு வரவில்லை. இது எல்லோரும் சேர்ந்து இழுக்கவேண்டிய தேர். அதில் உங்கள் கையும் இருக்கவேண்டும் என்ற கடமையை நினைவு படுத்தவே வந்து உள்ளேன்.
தமிழகத்தை சீரமைப்போம்
தமிழகத்திற்கு தேவை ஒரு நேர்மையான அரசு அதனை எங்களால் தான் அமைக்க முடியும். நாங்கள் அமைக்கும் ஆட்சியில் சி.பி.ஐ. சோதனை நடத்த தேவை இல்லை. மக்களே கணக்கு கேட்கலாம்.நாங்கள் பதில் சொல்வோம். தமிழகத்தை சீரமைக்கவேண்டு்ம் என்பது வரலாறு நமது அனைவருக்கும் கொடுத்திருக்கும் வாய்ப்பு என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.