வாக்குப் பதிவு எந்திரம் மீது நம்பிக்கை போச்சு.. மீண்டும் வாக்குச் சீட்டு தேவை.. ஜவாஹிருல்லா
திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமுல்படுத்திட வேண்டும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் மினி மஹாலில் நடைபெற்ற விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள் என அவர் எழுதிய நூல் அறிமுக விழாவுக்குப் பின்னர் அவர் கூறியது:
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது நம்பிக்கையற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் வகையிலும், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் வரவிருக்கும் தேர்தலை நடத்த வேண்டும்.இதற்கு மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்திட வேண்டும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மோசடி செய்துதான் மோடி வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. டெல்லியில் நடந்த தேர்தலில் மோசடி செய்ய முடியாததால் தான் ஆம் ஆத்மி வெற்றி பெற முடிந்தது. மும்பையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமாகத்தான் வாக்குகள் விழுந்தது தெரிய வந்தது. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்திட வேண்டும். வளர்ந்துள்ள பல வெளிநாடுகளில் இன்றும் வாக்குச்சீட்டு முறையைத் தான் கடைப்பிடிக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழக அரசு செவிசாய்க்காமல் உள்ளது. அவர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். அண்மையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ஜன.26 முதல் 28 வரை இஸ்லாமியர்கள் மாநாடு, நடைபெறவுள்ளது. நிறைவு நாளான ஜன. 28 ஆம் தேதி ஒரு நாள் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.