நாளை திறக்கப்படும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் முழுமைபெறாத தற்காலிக தடுப்பணை.. நீர் வீணாகும் அபாயம்
திருச்சி: நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இன்னும் முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் திறந்துவிடப்படும் நீர் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் நிறைந்து வழிகின்றன. அங்கிருந்து சுமார் 3 லட்சம் கனஅடிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 2.50 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 18 அடியை தாண்டியது. தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. நேற்றை விட இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நாளைக்குள் மேட்டூர் அணை 100 அடி எட்டும் என தெரிகிறது. இதனால் இன்னும் சில நாளில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். இதனால் மேட்டூர் அணையை காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு திருச்சியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்தது. இதையடுத்து அங்கு 387கோடி ரூபாய் செலவில் புதிய கதவணை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை அங்கு தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் முழுமைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் நாளை மேட்டூர் அணை திறக்கப்படும் பட்சத்தில் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும் முக்கொம்பில் தற்போது தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.