திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எழுத்தாளர் மற்றும் பதிப்பகம் சார்பில் புத்தக வெளியீடு.. 1049வது முதல் பிரதியை வாங்கிய இலங்கை புரவலர்

Google Oneindia Tamil News

திருச்சி: எழுத்தாளர் மற்றும் பதிப்பகம் சார்பில் வெளியிடும் நூல்களை இந்தியாவை பூர்வமாக கொண்ட இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் 1049 வது முதல் நூலை வாங்கி சாதனை படைக்கிறார்.

தமிழ் நாட்டின் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சென்னை 43வது புத்தகத் திருவிழா சென்னை நந்தனத்தில் உள்ள வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

 Indian origin Srilankan buys first copy of newly published books for 15 years

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்த இப்புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்களின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் வைத்தியநாதன், கிருபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

விழாவில் வெளியிடப்பட்ட 43 நூல்களின் முதல் பிரதிகள் அடங்கிய பொதியை நீதியரசர் எஸ்.வைத்தியநாதன்-நடிகையும் நடனக் கலைஞருமான சொர்ணமால்யா இருவரும் இணைந்து வழங்க, இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தொண்டாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார். இலங்கைப் புரவலருக்கும், கலைஞருக்கும் உயர்நீதிமன்ற நீதியரசர் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்ததுடன் நினைவுப் பரிசில்களையும் வழங்கினர். வாழ்த்துரை வழங்கிய வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு, மர்யம் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தினார்.

ஜெயஸ்ரீ சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பங்கேற்ற- மேலாளர் ஆர்.மோகன்ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார். இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்.

 Indian origin Srilankan buys first copy of newly published books for 15 years

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.எஸ்.டி. அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சேமு.முகமதலி தலைமை தாங்கினார். கூட்டத்தை மெளலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி கிராஅத் ஓதினார். இறையன்பன் குத்தூஸ் ஒருமைப்பாட்டுக் கீதம் பாடினார்.

பேராசிரியர் கேப்டன் அமீர் அலி, பேராசிரியர் டாக்டர் சே.சாதிக், அல்ஹாஜ் வி.என்.ஏ. ஜலால், மெளலவி டாக்டர் பி.எஸ். சையது மஸ்வூது ஜமாலி, அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தஃபா, பேராசிரியர் டாக்டர் ரூமி முதலியோர் முன்னிலை வகித்தார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவர் அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் நூல்களை வெளியிட. இலங்கை இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை மூத்த எழுத்தாளர் கலைச் செல்வன், எம். அக்பர்கான் , ஈரோடு தாஜ் முகைதீன், அமீர் ஜவஹர், இப்னு சவூத், காயல் எஸ்.ஏ.சி. ஹமீது, கவிஞர் ஜலாலுத்தீன், ரஹ்மத் புத்தகம் பதிப்பாளர் எஸ்.ஏ. முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கீன் மாநில செயலாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில், ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாஹூல் ஹமீது, இஸட். பெரோஸ்தீன் மற்றும் பலர் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

 Indian origin Srilankan buys first copy of newly published books for 15 years

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மெளலவி கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி, பேராசிரியர் டாக்டர் அப்துல் ரசாக், அபுதாபி ரெஜினால்டு சாம்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மனித உரிமை கூட்டமைப்புத் தேசியத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மூத்த ஊடகவியலாளர் வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது ஏற்புரை ஆற்றினார் . மூத்த ஊடக ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் ஆர்.எஸ். தர்வேஷ் முகைதீன், ஷேக் சிராஜுதீன், ஃபைஸல், முஹம்மது உசேன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சமுதாயப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிளை பேராசிரியர் டாக்டர் மு. இ. அகமது மரைக்காயர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர். இவரது பூர்வீகம் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பின்னர் இவருடைய சிறுவயதில் இவரது குடும்பம் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்கள். பின்னர் கொழும்பில் சிறு சிறு தொழில் ஈடுபட்டு அரசாங்கம் பணியில் சேர்ந்து பல்வேறு சமூக பணிகளை செய்தவர் தான் புரவலர் ஹாசிம் உமர். இவர் இலங்கையில் எழுத்தாளர்கள் நாவல் மற்றும் கவிதை நூல்களை வெளியிடுவார்கள் என்றால் இவரது தான் முதல் பிரதியை வாங்குவார்.

இலங்கை மட்டுமல்லாமல் இந்தியா மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று தனது சொந்த செலவில் சென்று முதல் பிரதியை வாங்கி சாதனை படைக்க உள்ளார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூலை முதல் பிரதியை வாங்கினார். பின்னர் நமது ஓன் இந்தியா தமிழ் செய்தி தளத்திற்கு எமது செய்தியாளர் சிறப்பு பேட்டி எடுத்தார். அவரிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. சளைக்காமல் பதில் அளித்தார்.

 Indian origin Srilankan buys first copy of newly published books for 15 years

கேள்வி: தாங்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதன் நோக்கம் என்ன?

பதில்: மறைந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் உருவாக்கிய இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் அவர்கள் அழைப்பை ஏற்று கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் பிரதியை வாங்க தமிழகம் வருகை தந்து முதல் பிரதிக பெற்றுக் கொண்டேன். 1049 வது முதல் பிரதியாகும். இதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: சமீபத்தில் சென்னையில் புத்தகம் கண்காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் சார்பில் 64 நூல்கள் வெளியிடப்பட்டது அதை நீங்கள் முதல் பிரதியை வாங்கும் போது உங்களது மனநிலை எப்படி இருந்தது.

பதில்: சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள வருகை தந்தபோது புத்தகக் கண்காட்சியில் மணிமேகலை பிரசுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற அனைத்து பதிப்பாளர்களையும், இஸ்லாமிய கழகத்தின் தலைவர் அவர்களையும், இன்னும் பல முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி இருக்கின்றோம்.

80 வயதைப் பூர்த்தி செய்திருக்கும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களைச் சந்தித்து - அவர்களது நீடித்த நல்வாழ்வுக்காகவும், இந்த நாட்டிற்கான அவர்களது சேவை தொடரவும் வாழ்த்திப் பிரார்த்தித்தேன். அவரும் எனது சாதனைப் பயணம் வெற்றியில் முடியவும், யாரும் எட்ட முடியாத சாதனைகளை அடையவும் வாழ்த்தினார்.

மணிமேகலை பிரசுரத்தின் பதிப்பகம் வெளியிடும் அனைத்து நூல்கள் நான் தவறமால் படிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போன்று தான் முதல் பிரதியை வாங்கும் போது எனது மனநிலை எல்லாயில்லா சந்தோஷம் எனக்கு இருந்தது.

 Indian origin Srilankan buys first copy of newly published books for 15 years

கேள்வி: புத்தகப் பதிப்பாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக எண்ணிலடங்கா நூல்களை நீங்கள் வாங்கி உலக சாதனையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் இதுவரை எத்தனை நூல்களை வாங்கி இருக்கிறீர்கள்? சென்னை புத்தகக் கண்காட்சியில் எத்தனை நூல்களை வாங்கி இருக்கிறீர்கள்?

பதில்: கடந்த 15 ஆண்டுகளாக மணிமேகலைப் பிரசுரம் வெளியிடுகின்ற நூல்கள் ஒவ்வொன்றையும் வாங்கி வந்திருக்கிறேன் இப்பொழுது 43ஆவது ஆண்டில் இருக்கும் அந்தப் பிரசுரத்தின் மூலம் 43 நூல்களை வாங்கியுள்ளது போல் முந்தைய காலங்களிலும் நூல்களை வாங்கி இருக்கிறேன். அப்படிப் பார்க்கும் பொழுது இதுவரை 1049 நூல்களை வாங்கி இருக்கின்றேன். இத்தனை நூல்களை வாங்குவது என்பது உலக அளவில் ஒரு சாதனையாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: கின்னஸ் சாதனைக்காக எதுவும் விண்ணப்பித்து இருக்கிறீர்களா?

பதில்: ஆம், விண்ணப்பித்து இருக்கிறேன். விரைவில் அந்தச் சாதனையை நிகழ்த்தி, உரிய சான்றிதழைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை எத்தனை நூல்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கின்றோம் என்ற விபரம் பட்டியலை கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி இருக்கிறோம்.

பொதுவாக ஒரு வாசகர் தனக்குப் பிடித்த பதிப்பகத்தின் நூல் அல்லது பிடித்த எழுத்தாளரின் நூலை மட்டுமே வாங்குவது வழக்கம். அந்த வழமையிலிருந்து விடுபட்டு, பயனுள்ள நூல்களை வெளியிடும் எந்தப் பதிப்பகம் ஆனாலும், எந்த எழுத்தாளர் ஆனாலும் - அவர்களின் பிரதியை கவுரவமான விலை கொடுத்து வாங்குவதை வழமையாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில் முதல் பிரதியை - ரூபாய் ஐந்தாயிரம், பத்தாயிரம், என்றும், கம்பன் விழாவில் ஒரு லட்சம் ரூபாய் வரை கூட புத்தகத்தின் விலையைத் தாண்டி நன்கொடை அளித்து நூல்களை வாங்கி இருக்கின்றோம். இவ்வாறாக இதுவரை புத்தகங்கள் வாங்குவதற்காக என்றே சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்து இருக்கிறோம்.

கேள்வி:நூல்களை எழுதிய பின், அவற்றைச் செலவழித்து வெளியிட முடியாதவர்களுக்கு இலவசமாக அச்சிட்டு வழங்கிட ஏதேனும் திட்டம் வைத்து உள்ளீர்களா?

பதில்: நல்ல எழுத்தாளர்கள் அருமையான தலைப்புகளில் எழுதியுள்ள ஆக்கங்களை நூல்களாக வெளிக்கொண்டு வர பொருளாதாரம் தடையாக உள்ளவர்களுக்கு "புரவலர் புத்தகப் பூங்கா" என்ற நிறுவனத்தை அமைத்து - அதன் மூலம் அவர்கள் எழுதிய ஆக்கங்களை வாங்கி, எங்கள் பொருட்செலவிலேயே அவற்றை அச்சிட்டுக் கொடுத்து, வெளியீட்டு விழாவையும் நடத்தி, அதில் சேகரமாகும் தொகையையும், புத்தகம் விற்றது போக எஞ்சிய தொகையையும் அதை எழுதியவருக்கே ஒப்படைத்து விடுகிறோம்.

ஒரு படைப்பாளி வெறுமனே படைப்பாளியாக மட்டும் இருந்துவிடாமல் ஒரு வெளியீட்டாளராகவும் உயர வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

கேள்வி: அவ்வாறாக இதுவரை எத்தனை நூல்களை உங்கள் பொருட்செலவில் வெளியிட்டு வழங்கி இருக்கிறீர்கள்?

பதில்: ஆறு புத்தகங்களை இதுவரை வெளியிட்டு இருக்கின்றோம். இன்னும் பல புத்தகங்கள் இந்த வகையில் எங்கள் பரிசீலனைக்கு வந்துள்ளன. இதற்கென சிறப்புத் தேர்வுக் குழு உள்ளது. அவர்கள் அந்த நூல்களைப் பரிசீலித்துத் தேர்ந்தெடுத்துத் தருவார்கள் அல்லது அவர்களாகவே சரியான நூல்களை இனங்கண்டு பரிந்துரைப்பார்கள். அவ்வாறு அவர்கள் பரிந்துரைக்கும் நூல்களை நாங்கள் வெளியிடுகின்றோம். இப்போது நிலுவையில் உள்ள நூல்கள் எத்தனை, அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்டவை எத்தனை என்பன குறித்து நாங்கள் கொழும்புக்குச் சென்ற பிறகுதான் அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி: பதிப்பாளர்கள் வெளியிடும் நூல்களின் முதல் பிரதியை வாங்கி விட வேண்டும் என்ற தனிச் சிந்தனை உங்களுக்கு மட்டும் எப்படித் தோன்றியது? எப்போது தோன்றியது?

பதில்: விளையாட்டாகத்தான் துவக்கத்தில் வாங்கி வந்தேன். இவ்வாறாக வாங்க வாங்க எனக்கும் ஒரு மனநிறைவு ஏற்பட்டது. தமிழுக்குத் தொண்டாற்றுவதாகவும், தரமான தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதாகவும் என் உள்ளுணர்வு சொன்னது. இதையே நாம் ஏன் ஒரு சாதனையாகச் செய்யக் கூடாது என்று எழுந்த கேள்வியே என்னை இன்று இந்த அளவுக்கு நூல்களை வாங்க வைத்திருக்கிறது.

கேள்வி:இவ்வாறாக எங்கெங்கு நூல்களை வாங்கி இருக்கிறீர்கள்?

பதில்: இலங்கையில் பல நூல்களை வாங்கி இருக்கிறோம். இந்தியாவில் சென்னையிலும், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நூல்களை வாங்கி இருக்கிறோம்.

கேள்வி: உங்கள் இலக்கிய ஆர்வம்தான் உங்களை இப்படி இத்தனை நூல்களை வாங்க வைத்திருக்கிறது என்று கூறலாமா?

பதில்: இலக்கிய ஆர்வம் என்பதையும் தாண்டி, தரமான இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்துவதே இந்த நடவடிக்கைக்கான முதன்மை நோக்கமாக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

English summary
A Srilankan donor buys first copy of each and every book released by writers and publishing company. He bought the book for 1049 time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X