ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா? தினகரன் பதில்
திருச்சி : அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் எனது எண்ணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், உங்கள் ஊகத்திற்கு பதில் அளிக்க முடியாது என்றார்.
திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உறவினர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நலம் விசாரிப்பதற்காக டிடிவி தினகரன் இன்று திருச்சி வந்தார்.
பின்னர், செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது :
ஓபிஎஸ் இபிஎஸ்
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தன் நோக்கம் என்னவாக இருக்கும்?
பதில்: இதுபற்றி நான் என்ன சொல்ல முடியும். ஓபிஎஸ், இபிஎஸ்யிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இணையுமா
கேள்வி: அமமுக இனியும் தனித்து செயல்படுமா அல்லது அதிமுகவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா?
பதில்: அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமமுகவை தொடங்கினோம். எனவே தேர்தலில் ஏற்பட்ட வெற்றி- தோல்விகளால் எந்தத் தடையும் ஏற்படாது.. எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்-
3 பேரும் இணைவார்களா
கேள்வி: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா?
பதில் : ஊகத்துக்கு நான் பதில் கூற முடியாது.
என்ன காரணம்
கேள்வி: அமமுகவினர் பலரும் கட்சி மாறிச் செல்கிறார்களே?
பதில் : சுயநலத்துக்காக வந்தவர்கள், விலை போகக் கூடியவர்கள் விலை போகிறார்கள். கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் தான் இருக்கிறார்கள் . எனவே இதையெல்லாம் தாண்டித்தான் அரசியல் இயக்கம் இயங்கும். தொண்டர்களால் உருவாக்கப்பட்டது அமமுக. எங்கள் இலக்கை அடையும் வரை போராடுவோம்.
அதிமுக
கேள்வி: சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வர வாய்ப்பு உள்ளதா?
பதில் : அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரது எண்ணமும்.
உங்கள் கருத்து
கேள்வி: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நடத்தி வரும் சோதனைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் சரிதான்.
விரைவில் வரும்
கேள்வி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு வருகிறது. அந்த ஒற்றைத் தலைமை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரில் யாராக இருக்கும்?
பதில் : உங்கள் ஊகத்துக்கு பதில் அளிக்க முடியாது. அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றைத் தலைமையில்தான் இருந்தது. தற்போது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகிவிடும்.
எப்போது வருவார்
கேள்வி: அரசியலில் இருந்து விலகிவிட்டதாகக் கூறிய வி.கே.சசிகலா, தற்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரிடம் பேசும்போது விரைவில் வந்துவிடுவேன் என்கிறார். அதற்கான வாய்ப்பு எப்போது?
பதில் : அவரே சொல்வார். அவரைப் பார்க்கும்போது கேளுங்கள்.
தினகரன் கருத்து
கேள்வி: திமுக ஆட்சியில் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது எது?
பதில் : யோசித்துச் சொல்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் சொல்கிறேன். எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அவையெல்லாம் திருப்பி வருகின்றன. எனவே, மகிழ்ச்சியைவிடச் சிரிப்பாக உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்த்ததையெல்லாம் மறந்துவிட்டனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்" இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.