ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொகைதீன் மருத்துவமனையில் அனுமதி... திடீர் உடல்நலக் குறைவு
திருச்சி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகைதீனுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாள்தோறும் கட்சிப்பணிகளை தவறாமல் கவனித்து வந்தவர் காதர் மொகைதீன். ஐ.யூ.எம்.எல். கட்சியின் தமிழக தலைவராக மட்டுமல்லாமல் அகில இந்திய தலைவராகவும் அவர் உள்ளார். இதனால் பல மாநிலங்களில் இருந்து வரும் கட்சி பிரச்சனைகள், செயல்பாடுகள், நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என சென்னையில் இருந்தவாறு கண்காணித்து ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
இவரது சொந்த ஊர் திருச்சி என்பதால் கட்சி அலுவல் பணிகள் இல்லாத நாட்களில் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள வீட்டுக்கு வந்துவிடுவார். இந்நிலையில் திருச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்த காதர் மொகைதீனுக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் இருமலும் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்த குடும்பத்தினர் அவரை உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு கலெக்டர் ஆபிசுக்கு கையில் மனுவோடு வந்த கணேசன்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அபுபக்கர், காதர் மொகைதீன் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும், அவர் பூரண உடல் நலம் பெற்று திரும்ப அனைவரும் பிரார்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் காதர் மொகைதீன் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர்.