பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டை காண குவிந்த மக்கள்…பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிரசித்திப்பெற்ற பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்தன.
குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது, வெளிநாட்டினரையும் வெகுவாக ஈர்த்தது. அந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க நேரடியாகவும், மாவட்ட சுற்றுலாத்துறை மூலமாகவும் வெளிநாட்டினர் வந்திருந்தனர். குறிப்பாக, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு வெளி நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, சசிகலாவின் காளை, டிடிவி தினகரனின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பி காளை, உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதியின் காளை, பொன்னப்பர் ஹோட்டல் அதிபரின் காளை, திமுக, அதிமுக நிர்வாகிகளின் காளைகள் என பலரது காளைகள் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின. அந்த காளைகளுக்கும், அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு அடைந்த நிலையில் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
பொத்தமேட்டுப்பட்டி வியாகுலமாதா திடலில், ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன.
வீரர்களுக்கு போட்டியின் விதிமுறைகளும் முழுமையாக அறிவிக்கப்பட்டு, அதனை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் விதிமுறைகளுக்கு ஏற்ப, சுற்றுகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன.
போட்டியில் களமிறங்கிய காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று அடக்கினர். சில காளைகள் வீரர்களின் கைகளில் சிக்காமல் பறந்து சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை காண, வையம்பட்டி, கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.