முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை... அ.தி.மு.க சரியா நிறைவேற்றவில்லை... ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!
திருச்சி: தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களுக்கென 3.5% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அ.தி.மு.க அரசு அதை சரிவர நிறைவேற்றவில்லை என்று மனித நேய மக்கள் கட்சி தலைவா் எம். ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
Recommended Video
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவை மொத்தமாக பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யும் வகையில்தான் மத்திய பட்ஜெட் அமைந்திருக்கிறது என்றும் ஜவாஹிருல்லா பேசினார்.
பொதுக்குழு கூட்டம்
மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனித நேய கட்சி தலைவா் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா், கரூா்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனா்.
அமித்ஷா பதவி விலகணும்
இந்த கூட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் விவசாயிகள் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. செய்த தவறு
பின்னர் மனித நேய கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- அ.தி.மு.க ஆட்சியால் மாநில உரிமைகள் பெரும் அளவில் பறிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டமன்றத்தில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று தீர்மானம் கொண்டுவந்தும், தற்போது அதை செயல்படுத்தி வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கென 3.5% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அ.தி.மு.க அரசு அதை சரிவர நிறைவேற்றவில்லை.
இந்தியாவை விற்கும் பட்ஜெட்
எனவே வரும் நாட்களில் அதனை சரியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஏழு மண்டலமாக பிரித்து பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். நிதி அமைச்சர் முழுக்க முழுக்க பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இந்தியாவை மொத்தமாக பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யும் வகையில்தான் இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்
நரேந்திர மோடியின் ஆட்சி மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய ஆட்சியாகத்தான் உள்ளது. செஸ் வரியை விதித்திருக்கிறார்கள். இதனால், மாநில அரசுக்கு வரும் நிதி குறையும். எட்டுவழிச் சாலைக்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உள்ளது. ஆனால், நேற்று இதை நிறைவேற்றியே தீருவோம் என கூறி உள்ளார்கள். பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மிக மிக அவதூறாக பேசியுள்ளார். அவரை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் 7 பேர் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என்று அவர் கூறினார்.