எங்களுக்கு 5 சீட் வேணும்... அதிமுகவிடம் ரிசர்வ் செய்யும் ஜான்பாண்டியன்!
திருச்சி: தங்களது கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகள் கேட்க முடிவு செய்து உள்ளதாகவும் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழக கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் ஜான்பாண்டியன் திருச்சி மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்தும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: வருகிற சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கட்சி கண்டிப்பாகப் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பது பின்னர் அறிவிப்போம். தற்போது அதிமுகவுடன்தான் இருக்கிறோம்.
ரஜினியின் கட்சி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. 31ஆம் தேதி தனது கட்சி குறித்து ரஜினி முழுமையாகக் கூறிய பிறகே எந்தக் கருத்தையும் கூற முடியும். அவரது கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ஓபிஎஸ் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்.
7 உட்பிரிவுகளையும் தேவேந்திர குல வேளாளா் என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த விஷயத்தில் அரசு எங்களை ஏமாற்றாது என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.