கலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என நான் கூறியது கலகக் குரல் அல்ல என முன்னாள் அமைச்சர் கே என் நேரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இந்த தண்ணீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.
இந்த நிலையில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார்.
தனித்து போட்டி
அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என கூறியிருந்தார்.
திமுக தனித்து போட்டி
இது காங்கிரஸ் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி என்று நான் கூறியது கலகக் குரல் அல்ல.
திமுக தலைவருக்கு
உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதால் கூறினேன். காங்கிரஸ் அதிக இடங்களில் நிற்பதை விட திமுக அதிக இடங்களில் நிற்க வேண்டும் என்பதால் அவ்வாறு கூறினேன்.
திமுக தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டவன் நான்.
மாவட்டச் செயலாளர்
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என கூறவில்லை. ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை சொன்னேன். ஒரு தொண்டன் என்ற முறையிலேயே எனது கருத்தை தெரிவித்தேன். மாவட்டச் செயலாளராகிய நான் எப்படி முடிவு எடுக்க முடியும்.
தன்னிலை விளக்கம்
திமுக தலைவர்தான் முடிவு எடுப்பார். தன்னிலை விளக்கத்திற்காக மட்டுமே செய்தியாளர்களை சந்தித்தேன். மற்றபடி திமுக தலைமை என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றார் கே என் நேரு.