ராத்திரியோடு ராத்திரியாக.. "மய்யம் செய்த சம்பவம்".. திருச்சியில் பரபரப்பு.. கலக்கத்தில் கழகங்கள்!
கமலுக்கு ஒட்டப்பட்ட போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருச்சி: திருச்சியில் மக்கள் மய்யம் சார்பாக கமலுக்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... ராத்திரியோடு ராத்திரியாக, இந்த போஸ்டர் திமுக, அதிமுக என இரு தரப்புக்குமே லேசான நடுக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறதாம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்தே போட்டியிடும்... மக்களுடன் தான் கூட்டணி என்று கமல்ஹாசன் சொல்லிவிட்டார்.. இதையடுத்து அவரது தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வாகனமும் ரெடியாகிவிட்டது.
ஆனால், கமல் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்று அறிவிக்கப்படவில்லை.. ஆனாலும் தேர்தலை சந்திப்பதற்காக கமல் தன்னுடைய நிர்வாகிகளுடன் அனைத்து களப்பணிகளையும் செய்து வருகிறார்.
மயிலாப்பூரில் களமிறங்கும் ஆழ்வார் பேட்டை நாயகன் கமல்... அசத்தல் வெற்றி கிடைக்குமா
பிறந்தநாள்
இந்நிலையில் வருகிற 7-ந் தேதி கமலுக்கு பிறந்த நாள் வர உள்ளது.. அதனால் அவருக்கு வாழ்த்து சொல்லி பல மாவட்டங்களில் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டு வருகிறது.. அந்த வகையில் திருச்சியிலும் கட்சி நிர்வாகிகள் மிக பிரம்மாண்டமான போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.. அதில், "திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அரசாள போகும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்‘ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
திருச்சி
இதுதான் தற்போது பரபரப்பை கூட்டி உள்ளது.. நேற்று கமல் மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக ஒரு செய்தி கசிந்தது.. அது உறுதியானதா இல்லையா என்று தெரியாத நிலையில், கமல் திருச்சியில் போட்டியிட போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வெல்லமண்டி நடராஜன்
திருச்சியை பொறுத்தவரை திமுகவின் கோட்டை ஆகும்.. அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருக்கிறார்.. நடக்க போகும் தேர்தலில் திருச்சியை கைப்பற்ற திமுக பல்வேறு வியூகங்களை எடுத்து வருகிறது.. இந்நிலையில், கமலுக்காக பொறிக்கப்பட்டுள்ள இந்த வாக்கியம் திமுக, அதிமுக வட்டாரத்தில் கடுமையான கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி
கமல் எங்கு போட்டியிட போகிறார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திருச்சி கிழக்கு தொகுதியை குறிப்பிட்டு அவரது நிர்வாகிகள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர், அவரது அனுமதி பெற்று தான் ஒட்டப்பட்டதா? அல்லது கட்சி நிர்வாகிகள் ஆர்வ கோளாறினால் இப்படி வாசகங்களை சேர்த்து ஒட்டினார்களா? என தெரியவில்லை. திருச்சி கோட்டையில் இருந்து ராத்திரியோடு ராத்திரியாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால், செயின் ஜார்ஜ் கோட்டையும் கலங்கியே உள்ளதாம்!