"சிவ சிவ" கோஷம்.. மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம்.. ஏற்றும்போது அணைந்ததால் பரபரப்பு!
Recommended Video
திருச்சி: மலைக்கோட்டை உச்சியில் கொட்டும் மழையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும்போது தீப்பந்தம் அணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் கார்த்திகை மகா தீப திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணி கடந்த 11-ந்தேதி தொடங்கியது.
இந்தநிலையில், தீப்பந்தம் மலை உச்சிக்கு எடுத்து செல்லும்போது, மழை காரணமாக அணைந்தது. தொடர்ந்து மீண்டும் தீப்பந்தம் ஏற்றப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் 237 அடி மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த திரியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது, பக்தர்கள் 'சிவ சிவா' என்றும், 'அரோகரா அரோகரா' என்றும் கோஷங்கள் எழுப்பி சுவாமியையும், தீபத்தையும் வழிபட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே கார்த்திகை தீப நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மலைக்கோட்டையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் மலைக்கோட்டையை சுற்றியுள்ள ஏராளமான வீடுகளிலும், சிறிய விளக்குகளை கொண்டு கார்த்திகை தீபங்கள் ஏற்றி சிவனையும், அம்பாளையும் வழிபட்டனர். மலைக்கோட்டையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக் கூடியதாகும். இதேபோல மலைக்கோட்டையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் சுடலை தீபம் ஏற்றப்பட்டது.
ஸ்ரீரங்கநாதர் கோவில் சொக்கப்பானை:
இதே போல், கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன்னால் 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே காத்திருக்க இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
நம்பெருமாள் சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய பின்னர் நந்தவனம் தோப்பு வழியாக தாயார் சன்னதிக்கு சென்றார். அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு இரவு 9.15 மணிக்கு சென்றார். அங்கு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து படிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.15க்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.