நான் பட்ட அவமானம் ஏராளம்... கே.என்.நேரு பேச்சு... நிர்வாகிகள் கண்ணீர்
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளராக தாம் வர திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களுமே காரணம் என கே.என்.நேரு உருக்கத்துடன் பேசியதை கேட்டு பெண் நிர்வாகிகளின் கண்களில் கண்ணீர் வடிந்தன.
ஒன்றுபட்ட திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கரூர் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திருச்சி வடக்கு, திருச்சி மத்திய மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். அதேபோல் மூன்று மாவட்ட பொறுப்பாளர்களான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மாவட்ட முன்னாள் திமுக செயலாளருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
திமுக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முதன்மை செயலாளர் நேரு, புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கூறி சில அறிவுரைகள் கூறினார். சாதியை பார்த்து செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும், கட்சிக்காரர்களை முழுவதுமாக மாவட்ட பொறுப்பாளர்கள் நம்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். எந்தக் கட்சிக்காரனையும் சாதாரணமாக நினைக்க வேண்டாம் எனக் கூறிய நேரு, நிர்வாகிகளும், மாவட்ட பிரதிநிதிகளும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், 27 ஆண்டுகளுக்கு முன்பு தாம் திருச்சி மாவட்டச் செயலாளர் ஆன போது ஏராளமான அவமானங்களை சந்தித்ததாகவும், அப்படி அவமானங்களை எல்லாம் சந்தித்தும், சகித்தும் தான் கட்சியில் படிப்படியாக முன்னேறியதாக சுயபுராணம் பாடினார். மேலும், இன்று முதன்மை செயலாளர் பதவி தனக்கு தேடி வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், பிரதிநிதிகளுமே என உருக்கத்துடன் தெரிவித்தார். நீங்கள் இல்லாமல் உங்கள் உழைப்பு இல்லாமல் தனக்கு நற்பெயர் கிடைத்திருக்காது எனவும் தெரிவித்தார்.
எப்போதும் அதட்டலாகவே பேசும் நேரு இன்று சற்று உணர்ச்சிவசப்பட்டவராக பேசினார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த பெண் நிர்வாகிகள் மற்றும் நேருவின் தீவிர விசுவாசிகளின் கண்களில் கண்ணீர் ததும்பின.