ஏங்க கொரோனாவும் இல்ல... ஒன்னும் இல்ல.. இது உங்களுக்கு தேவையா... கே.என்.நேரு 'கலகல' பதில்..!
திருச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா உறுதியானது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் தனக்கே உரிய நகைச்சுவை நயத்துடன் பதில் அளித்தார் கே.என்.நேரு.
''ஏங்க கொரோனாவெல்லாம் ஒன்னுமில்லை, தலைவர் 100 % நல்லாயிருக்காரு, இப்ப இந்த கேள்வி உங்களுக்கு தேவையா.. உள்ளூர் பற்றி கேளுங்க'' என நேரு அளித்த பதிலைக் கேட்டு அங்கு சிரிப்பலை எழுந்தது.
மேலும், திமுக ஆட்சியில் முடிந்தால் பெரியார் சிலையை தொட்டுப்பார்க்கட்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் பேசியது என்ன...? 24 மணி நேரத்தில் திமுகவை குளிர்வித்த காங்கிரஸ்.!
மத்திய அரசு
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்ட நிலையில், உரியவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காரணம் இங்கு இவர்கள் நடவடிக்கை எடுத்தால் அங்கு அவர்கள் (மத்திய அரசு) நடவடிக்கை எடுப்பார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சுவதாக விமர்சித்தார். ஏற்கனவே இரண்டு இடங்களில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட போதே அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் இத்தகைய துணிச்சல் வந்திருக்காது எனக் கூறினார்.
முடிந்தால் தொடு
திமுக ஆட்சியில் முடிந்தால் பெரியார் சிலையை தொட்டுப்பாருங்கள் என காவிச்சாயம் பூசும் கும்பலுக்கு கே.என். நேரு பகிரங்க சவால் விடுத்துள்ளார். பெரியாரை சிறுமைப்படுத்துவதாக நினைத்து தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்தை இத்தகைய நபர்கள் சிறுமைப்படுத்தி மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வைப்பதாக தெரிவித்தார். பெரியாருக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் ஒரு வேளை அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்களோ என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
கிண்டல் நோக்கம்
திமுகவில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் வேண்டுமென்றே கிண்டல் செய்யும் நோக்கத்துடன் ஒரு சிலர் செய்யும் காரியங்களை பற்றி பொருட்படுத்த தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், மிஸ்டு கால் கொடுத்தால் உறுப்பினராக்கும் கட்சிக்கு மத்தியில் திமுகவின் இந்த முயற்சி எவ்வளவோ மேல் என்றும் பாஜகவை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு திமுகவிடம் மட்டும் கேள்விக்கேட்பதை ஊடகங்கள் வாடிக்கையாக வைத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
இளைஞர்கள்
ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலுக்கு அஞ்சி திமுகவுக்கு வரும் இளைஞர்களை தங்களால் வேண்டாம் எனச் சொல்ல முடியாது என்றும் கட்சியை வளர்ப்பதே தங்கள் பணி எனவும் கே.ன்.நேரு கூறினார். மேலும், திமுகவின் வெற்றிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.