பேருந்துகளை அரசு ஏன் இயக்கவில்லை தெரியுமா...? காரணத்தை விளக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி: குறைந்த எண்ணிக்கையில் பயணிகளை வைத்து பேருந்துகளை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் எனக் கருதி அதனை அரசு முடக்கியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு புகார் கூறியுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் உறவினர்கள், நண்பர்கள் இல்ல சுப, துக்க, நிகழ்வுகளுக்கு கூட செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதேபோல் நடுத்தர வர்க்கத்தினரும் வாடகை கார்களில் செல்லலாம் என்றால் இ-பாஸ் அவர்களை முடக்கி வைத்துள்ளது.
"இ பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.." மனித உரிமை ஆணையம் அதிரடி என்ட்ரி! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதற்காக போக்குவரத்து சேவையை நிறுத்தி வைப்பது முறையல்ல என அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு பேருந்தை 5 மாதங்களுக்கு ஓட்டாமல் நிறுத்தி வைத்தால் அதனை மீண்டும் இயக்க பல ஆயிரம் ரூபாய் பழுது பார்க்க செலவிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.
சுகாதாரத்துறை விதிமுறை
தமிழக அரசு லாப நஷ்ட கணக்குகளை பார்க்காமல் மக்களின் பரிதவிப்பை உணர்ந்து பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவ்வாறு பேருந்துகளை இயக்கும் போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் சுகாதாரத்துறை விதிமுறைகளின் படி ஒரு பேருந்தில் 20 முதல் 25 பயணிகள் வரை மட்டுமே ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பழுதாகும்
மோட்டார் வாகனத்தை பொறுத்தவரை அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், 5 மாதங்களுக்கு பேருந்தை இயக்காமல் வைத்திருந்தால் அது பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்ற முறையில் கே.என்.நேரும் கூறும் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரத்து செய்க
இ-பாஸ் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் அது ஊழலுக்கு வழி அமைத்து கொடுப்பதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் சமூக இடைவெளியின்றி கூட்டமாக பங்கேற்பதாகவும், அவர்களுக்கு எல்லாம் எப்படி இ-பாஸ் கிடைக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.