நெருங்கும் சட்டசபைத் தேர்தல்... மீண்டும் அமைச்சராக ஸ்ரீரங்கநாதரை சரணடைந்த கே.என் நேரு
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்துள்ளார் கே. என் நேரு.
திருச்சி: புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான
கே.என். நேரு இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக வலம் வர வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருக்கிறார் கே.என் நேரு.
தேர்தல் நேரம் நெருங்க நெருங்க முதல்வர் முதல் எம்எல்ஏக்கள் வரை கோவில் கோவிலாக வலம் வர ஆரம்பித்து விடுவார்கள். எதிரிகளை வெல்லும் யாகம் தொடங்கி அபிஷேகம், ஆராதனைகள் என சிறப்பு வழிபாடுகளை செய்து வேண்டுதல் வைப்பார்கள்.
இன்றைய தினம் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கநாதர் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானது. இந்த ஆலயம் பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரியது. சுக்கிர ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி வந்து ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்வார்.
ரங்கநாதரை தரிசிக்க கூடிய கூட்டம்
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் டோக்கன் பெற்று நம் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
கேஎன் நேருவுக்கு வரவேற்பு
திமுக முதன்மை செயலாளரும், எம்எல்ஏவுமான கே என் நேரு இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் பட்டர் வரவேற்பு அளித்தார். தேர்தல் காலம் என்பதால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலரும் இப்போது பக்தியோடு கோவிலை வலம் வர ஆரம்பித்து விட்டனர்.
ஸ்ரீரங்கநாதர் ரங்கநாச்சியார் தரிசனம்
மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வேண்டுதல் வைத்த கே.என் நேரு ஸ்ரீரங்க நாச்சியாரை தரிசனம் செய்தார். திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக வலம் வந்த கே.என் நேரு தற்போது எம்எல்ஏவாக மட்டுமே இருக்கிறார். மீண்டும் திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால் மட்டுமே அமைச்சராக முடிவும் என்பதால் ரங்கநாதரிடம் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்திருக்கிறார் கே.என் நேரு.