முதல் நாளே லடாய்.. நேருவை டென்ஷனாக்கிய திருநாவுக்கரசர்!
திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை டென்ஷன் ஆக்கியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. காலை 6.55 மணிக்கே கே.என்.நேரு தேர்தல் பணிமனையை திறந்து வைப்பதற்காக ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம். ஆனால் அங்கு நான்கைந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டும் தான் இருந்தார்களாம்.
வேட்பாளரான திருநாவுக்கரசரும் அங்கும் இல்லையாம். இதனால் கொதிப்படைந்த நேரு, எங்கய்யா உங்க வேட்பாளர்? வருவாரா என்ன? என கோபமாக கேட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு விட்டாராம்.
இந்த தகவல் திருநாவுக்கரசர் காதுக்கு எட்ட, விழுந்து அடித்து நேரு இருந்த குரு ஓட்டலுக்கே ஓடினாராம். பிறகு ஒரு வழியாக சமாதானம் செய்து நேருவை அழைத்து வந்து தேர்தல் பணிமனையை திறந்து வைக்க வைத்தாராம் திருநாவுக்கரசர்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த நேரு, ரிப்பன் வெட்டியதும் சரி.. சரி வாங்க வண்டியில ஏறுங்க பிரச்சாரத்துக்கு போகனும் என்றாராம். நேருவின் வேகத்துக்கும், சுறுசுறுப்புக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிறாராம் திருநாவுக்கரசர்.