பச்சரிசி மாவிடிச்சு.. பக்குவமாக வேகவைச்சு. ஆஹா.. உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்
திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ வீதம் 150 கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டைகள் தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களின் மேளதாளங்கள் முழங்க, தொட்டிலில் வைத்து கொண்டு வரப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது.
திருச்சியின் அடையாளமாகவும், தென் கயிலாயம் என்று போற்றப்படுவதுமான மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவில் உள்ளது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். மேலே அமைந்துள்ள கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் கீழே அமைந்துள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
14 நாள்கள் நடக்கிறது
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கியது. தொடர்ந்து விழா வருகிற 18-ந்தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது.
உச்சிப்பிள்ளையாருக்கு படையல்
முதல் நாளான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொட்டில் கட்டி எடுத்து சென்றனர்
இதற்காக நேற்று காலையில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட தொடங்கினர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் அவித்தனர்.
இன்று காலை 9.35 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது. இதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையல் இடப்பட்டது.
தீபாராதனைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தினமும் கணபதி தரிசனம்
விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் காட்சி அளிக்கிறார்.வருகிற 18-ந்தேதி மாணிக்க விநாயகர் சன்னதியில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
1,00,008 தோப்புக்கரணம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் நாடு செழிக்கவும், நல்ல மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் 1,00,008 தோப்புக்கரணம் பக்தர்கள் போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டனர். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற 1-ம் திருநாளில் பால கணபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.