வருது... வருது... பொங்கல் பானை வருது... மண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்
திருச்சி: திருச்சி அருகே கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அறுவடைத்திருநாள் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகயை வீடுகளில் மண்பானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் வழக்கமாகும்.
நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் மண் பானையில் பொங்கலிடுவது அன்று முதல் இன்று வரை தொன்று, தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது. அதற்காக பானைகள் தயாரிக்கும் வேலையில் தமிழகம் முழுக்க உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.
தயாராகும் மண்பானைகள்
அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்திலும் மண்பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், காவிரி கரை மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு தான் தனி மவுசு உள்ளது.
ஆற்றங்கரையில் தயாரிப்பு
திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் குடிசைகள் அமைத்து தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முழுமை பெற்ற பொங்கல் பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர்.
ஆர்வமுடன் வரும் வியாபாரிகள்
பார்க்க, பார்க்க அழகாக இருக்கும் அந்த பானைகளை வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து பொங்கல் பானைகளை வாங்கி செல்கின்றனர். காவிரி கரை மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு தான் தனி மவுசு என்பதால் நேரடியாக வந்து வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தொழிலாளர்கள் தீவிரம்
ஆகையால், அதிகளவு பொங்கல் பானைகளை தயாரிக்க மண்பாண்ட தொழிலாளர்கள் களமிறங்கி உள்ளனர். ஆனால், நாகரீக மோகத்தால் மண்பானைகளை வாங்கும் எண்ணம் குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
விற்கப்படும் பானைகள்
இது குறித்து, பொங்கல் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளி கூறுகையில், பொங்கல் பானை விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை. நாகரிக மோகம் அதிகரித்து வருவதால் மண்பானைகளில் பொங்கலிடுவதை மக்கள் மறந்து வருகிறார்கள். ஏற்கனவே கோவில் சன்னதிகளில் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்கு விற்பனை அடியோடு முடிந்து போய்விட்டது. மண் பானை, மண்சட்டி சமையலுக்கு மக்கள் மாறினால் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றனர்.