லலிதா ஜுவல்லரி கொள்ளை.. புதுக்கோட்டை லாட்ஜில் 5 பேர் சிக்கியது எப்படி? பின்னணி தகவல்கள்
Recommended Video
திருச்சி: லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை விவகாரம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் 5 வடமாநில கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் எப்படி சிக்கினர் என்பது தொடர்பாக புது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல கொள்ளை கும்பல் தமிழகத்திற்குள் ஊடுருவியிருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நேற்று அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்கள் சுமார் 13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடிகளை அணிந்தவாரே, மிகவும் தொழில்முறை நேர்த்தியுடன் அந்த கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபடும் காட்சிகள், சிசிடிவி கேமரா மூலமாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
7 தனிப்படைகள்
தமிழக போலீசாருக்கு பெரும் சவாலாக மாறி உள்ள, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்ய காவல் துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. லலிதா ஜூவல்லரி அமைந்துள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே சம்பவ நேரத்தின்போது பயன்படுத்தப்பட்ட செல்போன் சிக்னல்களை வைத்து காவல்துறையின் ஒரு படையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி நடத்தப்பட்ட ஆய்வின்போது, புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் திருச்சியில் காண்பித்த செல்போன் டவர் காண்பிப்பது தெரியவந்தது.
5 பேர் சிக்கினர்
இதையடுத்து இன்று புதுக்கோட்டை லாட்ஜில் காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அங்கே தங்கியிருந்த, வட மாநிலங்களை சேர்ந்த 5 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. போர்வை வியாபாரம் செய்ய வந்ததாகவும், அதற்காகவே அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகப்படும் நபர்கள்
இவர்களுக்கும் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடக்கிறது. இருப்பினும் காவல் துறையினர், அதிகார பூர்வமாக இந்த கைது நடவடிக்கை தொடர்பாக தகவல் வெளியிடவில்லை. கொள்ளையர்களிடம், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட மாநில கொள்ளை கும்பல்
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பல கொள்ளை கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், கோவை போன்ற நகரங்களில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் ஒரு கும்பல் தான் இது என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. எது எப்படியோ லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.