அட கடவுளே.. ரூ. 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்தும்... கடைசியில் பரமேஸ்வரி வீட்டுக்காரர் தோத்துட்டாரே!
அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் முருகன் படுதோல்வி அடைந்தார்
திருச்சி: நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது மண்ணச்சநல்லூர் தொகுதி.. இங்கு 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் படுதோல்வி அடைந்துள்ளார்.. இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஸ்ரீதர் அமோக வெற்றி பெற்றுள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முருகன் என்பவர் போட்டியிட்டார்.. இவர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர்.. இவரை எதிர்த்து திமுக சார்பில் ஸ்ரீதர் களமிறங்கினார்.
தன்னுடைய கணவனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அதிக தீவிரத்தை ஆரம்பத்தில் இருந்தே காட்டினார் பரமேஸ்வரி.. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பாலையூர், கரியமாணிக்கம், வலையூர் ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி
ஏலம் விடப்பட்டது
இதில் வலையூர் ஊராட்சியில் உள்ளாட்சிப் பதவிகளை கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. அப்போது ஒன்றிய கவுன்சிலர் பதவியை 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் முருகன். இதேபோல், ஊராட்சித் தலைவர் பதவியும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் ஏலம் விடப்பட்டது.
விசாரணை
இச்சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏலம் எடுத்ததைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாககூட அறிவித்தனர். இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் மீது சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
தோல்வி
இந்நிலையில், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சமயபுரம் அருகே கொணலை சூர்யா என்ஜினியரிங் காலேஜில் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், முருகன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார். இறுதியில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 2,511 ஓட்டுகள் பெற்று, 1,307 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிர்ச்சி
கணவர் முருகன் படுதோல்வியை சந்தித்துள்ளார்.. அதிமுகவின் எம்எல்ஏவின் கணவர் தோல்வி அடைந்தது பெருத்த அதிர்ச்சியை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.. இந்த தோல்விக்கு காரணம் அதிமுக மீதான வெறுப்பா அல்லது திமுகவின் சாணக்கியத்தனமா என்று தெரியவில்லை.. ஆனால், எம்எல்ஏவின் கணவர் தோல்வியை தழுவியிருப்பது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர்
சரி பரமேஸ்வரி குறித்த ஆரம்ப கால கதை ஒன்றை இப்ப பார்க்கலாமா.. மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி முருகன் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர். எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் வரும் சராசரிக் கனவுதான் இவருக்கும். எப்படியாவது அமைச்சர் ஆகி விட வேண்டும் என்பதுதான் அது. அதை நோக்கித்தான் அவர் ஆரம்பத்தில் பல காரியங்களை செய்து பார்த்தார்.
ஜெயலலிதா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல காரியங்களைச் செய்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் துறையூர் சாலை பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவிலில் கிடா வெட்டி விருந்து படைப்பதாக நேர்த்திக் கடன் நேர்ந்திருந்தார் பரமேஸ்வரி. அதை அவர் செய்த விதம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கிடாவெட்டு
25 ஆடு.. 250 கோழி 25 கிடாக்களையும், 250 கோழிகளையும் வெட்டிப் பலியிட்டு இந்த நேர்த்திக்கடனை செலுத்தினார் பரமேஸ்வரி. அதைத் தொடர்ந்து நடந்த விருந்தின் மணம் இன்னும் சாப்பிட்டவர்களின் கைகளை விட்டுப் போகவில்லையாம். இந்த விருந்தின்போது, பரமேஸ்வரியே தனது கையால் விருந்து பரிமாறி கட்சியினரை மகிழ்வித்தார். தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து மட்டன் பிரியாணி, கோழி வறுவல் என தடபுடலாக அதிமுகவினரைக் கவனித்து குஷிப்படுத்தியது.
பதவி ஆசை
மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏக்கள், மாவட்டம், நகரம், ஒன்றியம், வட்டம் என்று பல தரப்பினர் கிட்டத்தட்ட 3000 பேர் வரை விருந்து சாப்பிட்டுச் சென்றனர். மனசு முழுக்க அமைச்சர் பதவி ஆசையை நிரப்பி வைத்து பரமேஸ்வரி போட்ட இந்த விருந்து அவருக்குக் கடைசி வரை கை கொடுக்கவில்லை என்பதுதான் சோகமானது.