கல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்!
பைக் மீது லாரி மோதியதில் புது மாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்
Recommended Video
திருச்சி: கல்யாணம் ஆகி 2 நாள்தான் ஆச்சு.. லாரி மோதி புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புது மணப்பெண்ணோ ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சோகம் நிறைந்த கொடூரம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.
லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்குதெருவைச் சேர்ந்தவர் மோகன். 27 வயது. இவருக்கும் முள்ளிக்கருப்பூர் கிராமத்தை சேர்ந்த ரமணி என்ற பெண்ணிற்கும் போன ஞாயிற்றுக் கிழமைதான் கல்யாணம் ஆனது.
இந்நிலையில், நேற்று ராத்திரி முள்ளிக்கருப்பூர் கிராமத்திலிருந்து புதுமண தம்பதிகள் இருவர், மற்றும் மோகனின் நண்பர் ரஞ்சித் ஆகியோர் ஒரு பைக்கில் லால்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
வாளாடி சிவன்கோயில் அருகே வந்துக் கொண்டிருந்தபோது, அரியலூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த இவர்களின் பைக் மீது மோதியது. இதில் 3 பேருமே நிலைதடுமாறி கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் லாரியிலும் மோதி மோகன், ரஞ்சித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ரமணி உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
கல்யாணம் ஆன 2 நாளிலேயே மாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.