ஏன் என்னை பத்தி பேசறீங்க.. பேசினா நானும் பேசுவேன்.. பாஜகவை விடாமல் விளாசும் தம்பிதுரை
பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி இல்லை என்று மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: "அதாவது.. அத்தைக்கு மீசை முளைச்சாதான் சித்தப்பா என்பார்கள். அதனால இதுவரைக்கும் நாங்க பாஜககூட கூட்டணி பத்தி பேசவே இல்லை என்று தெரிவித்துள்ள மு.தம்பிதுரை, "ஏன் என்னை பத்தி பாஜக பேசணும்? என்னை விமர்சனம் செய்யறதாலதான் நான் அவங்களை விமர்சனம் செய்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
ரஃபேல் விவகாரம், பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா என பல விவகாரங்களில் நாடாளுமன்ற அவையில் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர்தான் தம்பிதுரை.
இதன் உச்சக்கட்ட எதிர்ப்புதான், மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது அதில் கலந்து கொள்ளாமல் இருந்தது. இதெல்லாம் போதாதென்று, அதிமுக-பாஜக கூட்டணி கூடவே கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் தம்பிதுரை.
திட்டவட்டம்
இப்படி தம்பிதுரை பாஜகவுக்கு எதிரான கருத்தை தெரிவித்து வந்தாலும், அதிமுக இதனை பெரிதுபடுத்தாமல் தம்பிதுரையின் தனிக்கருத்து என்பது போல சொல்லி ஒதுங்கி வருகிறது. இந்த நிலையில், இன்றைக்கும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை ரொம்ப தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தம்பிதுரை கூறியுள்ளார்.
மக்கள் குறைகள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மு.தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறார். கருத்தகோடங்கிப்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.தம்பிதுரை சொன்னதாவது:
விமர்சனம்
"பாஜக என்னை ஏன் விமர்சனம் செய்யணும். என்னை விமர்சனம் செய்வதாலேயே நான் பாஜகவை விமர்சனம் செய்து வருகிறேன். இன்று நம் நாட்டில் தேசியக் கட்சிகளே கிடையாது. எல்லாம் கட்சிகளும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியும் தேசிய கட்சி நிலைமையில் இல்லை.
தமிழிசை கருத்து
அதாவது, அத்தைக்கு மீசை முளைத்தா தான் சித்தப்பா என்பார்கள். பாஜகவுடன் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் பேசவே இல்லை. நாங்கள் இதுவரைக்குமே பாஜக கூட்டணியில் இல்லை. திராவிடக் கட்சிகளை தமிழகத்தில் வர விட மாட்டோம் என்று தமிழிசை சொல்கிறார்.
தன்மானம் இருக்கு
திராவிடக் கட்சிகள் வரக்கூடாது என்றால் தேசிய கட்சிகளை நாங்கள் எப்படி வர விடுவோம்? பாஜக திமுகவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை. எங்களுக்கும் உரிமை, தன்மானம் எல்லாம் இருக்கு.
அமோக வெற்றி
எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதை தமிழக முதல்வர் தெளிவாக சொல்லி விட்டார். அதனால பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற ஒரே தகுதி அதிமுகவுக்கு மட்டும்தான் இருக்கு" என்றார்.