நாக்கை அறுப்பேன் என பேட்டை ரவுடி போல் பேசுவதா.. அமைச்சருக்கு எதிராக மநீம புகார் மனு
திருச்சி: நாக்கை அறுப்பேன் என பேட்டை ரவுடி போல் பேசுவதா என அமைச்சருக்கு எதிராக திருச்சியில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார்.
இது பெரும் கண்டனங்களை எழுப்பியது. கமல்ஹாசனை கண்டித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என பதிலடி கொடுத்தார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்து தீவிரவாதி பேச்சு.. தேர்தல் ஆணையத்தின் வாய்ப்பூட்டு கமலுக்கா, ராஜேந்திர பாலாஜிக்கா?
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட உறுப்பினர் வழக்கறிஞர் கிஷோர் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் கண்ணியக்குறைவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அமைச்சர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு முரணான வகையில் பேசியுள்ளார்.
அடிப்படை கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் உரிமை அமைச்சர் உள்பட அனைவருக்கும் உண்டு. ஆனால் மக்கள் பிரதிநிதி என்பதை மறந்துவிட்டு பேட்டை ரவுடி போல் நாக்கை அறுப்பேன் என கூறுவது கண்டனத்துக்குரியது.
எனவே அவர் மீது நடவடிக்கை அளிக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது.