சகாயம் ஐஏஎஸ்சின் 'மக்கள் பாதை' அமைப்பினர் சைக்கிள் பேரணி.. கண்ணீர் விட்ட அய்யாக்கண்ணு
திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி சென்று வரும் நிலையில் திருச்சிக்கு வந்தடைந்தனர் . அவர்களை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கண்ணீர் மல்க வரவேற்றார்.
Recommended Video
வேளாண் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் இயங்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பில் கன்னியாகுமாரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி செல்ல முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் கடந்த 31ம் தேதி 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரியில் சைக்கிள் பேரணியினை துவங்கி வரும் 7ம் தேதி சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்
இந்த சைக்கிள் பேரணி இன்று காலை திருச்சி சமயபுரம் நெ. 1 டோல்கேட் வழியாக சென்னை நோக்கி சென்ற போது சைக்கிள் பேரணியில் வந்த மாணவர்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கண்ணீர் மல்க வரவேற்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்த கெளரவித்தார். பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் போல விவசாயிகள் போராட்டமும் விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமாக நடத்தவுள்ளோம் என செய்தியாளர்களிடம் கூறினார்.