விதவைப் பெண்களிடம் திருமண ஆசை காட்டி பல கோடி பறித்த மோசடி மன்னன் கைது
திருமண தகவல் மையத்தில் பல பெயர்களில் பதிவு செய்து விதவைப் பெண்களை விழ வைத்து பல கோடி பறித்த மோசடி மன்னனை திருச்சி லால்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சி: விவாகரத்து பெற்ற பெண்கள், விதவைகளுக்கு மறு வாழ்வு கொடுப்பதாக கூறி திருமண தகவல் மையம் மூலம் வலை வீசி அவர்களிடம் இருந்து பல கோடி பணத்தை பறித்துக்கொண்டு, பலாத்காரம் செய்து ஏமாற்றிய மோசடி மன்னனை திருச்சி லால்குடி மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்ரவர்த்திக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனாலும் ஒரு ஆசை பணக்காரனாக வேண்டும். அதற்காக பெண்களின் ஆசையை தூண்டி அவர்களை தனது வலையில் விழ வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அதற்காக அவர் செய்தது ரொம்ப அதிகம் இல்லை. திருமண தகவல் மையத்தில் பல பெயர்களில் பதிவு செய்து விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். சக்ரவர்த்தி என்று தனது ஒரிஜினல் பெயரை குறிப்பிடாமல் அஜய், விஜய், விது, சரவணன் என்று பல பெயர்களில் பதிவு செய்து பலரை வலையில் வீழ்த்தியுள்ளனர்.
சக்ரவர்த்தியின் வலையில் சிக்கியவர்கள் நன்றாக படித்து நல்ல சம்பளம் வாங்குபவர்கள்தான். சென்னை, திருச்சி என பெரிய நகரங்களில் டாக்டர்களாக வேலை செய்யும் பெண்கள்தான் இவனிடம் ஏமாந்துள்ளனர். பணத்தை மட்டுமல்ல உடல் ரீதியாகவும் அவனிடம் ஏமாந்து போய் வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று நினைத்து புகார் கொடுக்காமல் விட்டு விடுவதால் துணிந்து பலரை ஏமாற்றி இருக்கிறான் சக்ரவர்த்தி.
திருச்சி பெண் டாக்டர்
திருச்சியைச் சேர்ந்த பெண் டாக்டருக்கு கணவர் இறந்து விட்டார். ஒரு குழந்தை மட்டும் உள்ளது. மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதைப்பார்த்த சக்ரவர்த்தி அந்த டாக்டருக்கு வரை வீசினான். குழந்தை இருந்தாலும் பரவாயில்லை மறுவாழ்வு கொடுக்கத் தயார் என்று செல்போனில் பேசினார்.
பண மோசடி
அதை உண்மை என்று அந்த டாக்டரும் நம்பினார். முதல் வாழ்க்கைதான் சரியில்லை. இரண்டாவதாக வரும் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து சக்கரவர்த்தியுடன் பழகினார். தனிமையில் சந்தித்து உடல் ரீதியாகவும் தொடர்பை ஏற்படுத்தினான் லட்சக்கணக்கில் பணம் கறந்தான். 20 லட்சம் ரூபாய் வரை ஏமாந்திருக்கிறார் அந்த டாக்டர்.
மோசடியை கண்டுபிடித்த டாக்டர்
நாளாக நாளாக சக்கரவர்த்தியின் நடத்தையில் சந்தேகம் வரவே, திருவண்ணாமலைக்கு நேராக சென்றார் அந்த டாக்டர். வீட்டில் மனைவி, குழந்தைகள் இருந்தனர். அதோடு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் கடிதமும் கிடைத்தது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்ட விசயம் தெரிந்தது. இதனையடுத்தே திருச்சி லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவர் மீது நடவடிக்கை இல்லாமல் போகவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கார் டிரைவரும் கைது
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தண்டபாணி மற்றும் நிஷா பானு அமர்வு, சக்கரவர்த்தியை கைது செய்யாவிட்டால் திருச்சி எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று கண்டித்தனர். இதனையடுத்தே சக்ரவர்த்தியை கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சக்கரவர்த்திக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் முருகனையும் கைது செய்தனர். இருவரையும் விசாரித்ததில் பல தகவல்கள் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
கணவனால் கைவிடப்பட்ட, விதவை பெண்களாக பார்த்து வலை வீசி உடல் ரீதியாக நெருங்கி அவர்களிடம் பணம் கறப்பதே சக்கரவர்த்தியின் முக்கிய வேலையாக இருந்துள்ளது. லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.