"காப்பாத்துங்க".. கதறிய தம்பி.. மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த அண்ணன்.. திரண்டு வந்த ஊர் ஜனம்!
தம்பியை அண்ணன் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது
திருச்சி: "காப்பாத்துங்க.. என் குடும்பத்தை காப்பாத்துங்க.. மரத்துல கட்டி வெச்சு கொடுமைப்படுத்தறாங்க" என்ற அபயக்குரலை கேட்டதும் ஊர்மக்கள் திரண்டு வந்து தம்பதியை மீட்டுள்ளனர்..
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள பகுதி ரெங்ககவுண்டம்பட்டி.. இங்கு வசித்து வந்த சகோதரர்கள் பிச்சை - சின்னக்காளை.. பிச்சைக்கு 60 வயதாகிறது.. சின்னக்காளைக்கு 55 வயதாகிறது.
இருவருக்கும் சொந்தமாக தோட்டம், நிலம் உள்ளன.. இதில் நில பிரச்சனை சம்பந்தமாக ஒரு வழக்கும் கோர்ட்டில் உள்ளது. இப்போதைக்கு சின்னக்காளை தனது குடும்பத்தினருடன் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று தேர்தல் என்பதால் ஓட்டு போட சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தார்.. இன்று காலை தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்றார்.. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பிச்சையும் அவரது 3 மகன்களும் அவரை பிடித்து தோட்டத்திலேயே ஒரு மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்தனர்.
இதை பார்த்து சின்னக்காளையின் மனைவி இளஞ்சியம் கதறினார்.. உடனே அவரையும் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது.
தோட்டத்துக்குள் இருந்து சின்னக்காளை கத்தி கூச்சலிட்டனர்.. இவர்களின் குரலை கேட்டு கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டு விட்டனர்.. உங்களுக்குள்ள சொத்து பிரச்சனை இருந்தாலும், அதுக்காக மரத்துல கட்டி வெச்சு சித்ரவதை செய்றதை ஏத்துக்க முடியாது என்று ஊர்மக்கள் சின்னக்காளையிடம் வாதிட்டனர். ஆனாலும் அவர்கள் மக்கள் சொல்வதை காதிலேயே வாங்கி கொள்ளவில்லை.
இதனால் பொதுமக்கள் மணப்பாறை போலீசில் சென்று முறையிட்டனர். அவர்கள் விரைந்து வந்து சின்னக்காளை, அவரது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பிச்சை மகன்கள் 2 பேரை விசாரணைக்கான அழைத்துச் சென்றனர்.
மனிதாபிமானமற்ற பிச்சை குடும்பத்தினர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில், தம்பதி இருவரும் காப்பாற்றுங்கள் என்று கதறும் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.