அடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம்! மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு!
Recommended Video
திருச்சி: மணப்பாறை ஆவாரங்காட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500 காளைகளும், 400 காளையர்களும் பங்கேற்றனர். இதில் 25-க்கும் மேற்பட்ட காளையர்கள் மாடுகளை பிடிக்கும் போது காயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு இன்று நடந்தது.. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி பச்சை கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல் ஹக், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டனர். முதலில் நான்கு கிராமங்களின் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டது.
ஆரோவில்லில் மஞ்சுவிரட்டு.. தமிழர்களின் கலாச்சாரத்தை காண குவிந்த வெளிநாட்டினர்!
காளைகளை அடக்க 50, 50 தொகுப்பாக 400 காளையர்கள் களம் இறக்கப்பட்டார்கள். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த சில காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளைகள் தொட்டுக் கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு தலைக்கவசமும் அளிக்கப்பட்டது.. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பல பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்துள்ள நிலையில், வீரர்கள், பார்வையாளர், மாட்டு உரிமையாளர் என 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.