வெளியே வரமுடியாது... கமல்ஹாசனுக்கு மன்னார்குடி ஜீயர் வார்னிங்!
திருச்சி: இந்துக்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் எச்சரித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமலின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கமல் மீது போலீஸில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல்ஹாசனுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸுக்கு ஓட்டு போட்டதற்காக சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு... பாஜக ஆதரவாளரின் வெறிச்செயல்!
நம்பிக்கை வந்துள்ளது
அவர் பேசியதாவது, தமிழக கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் அனைத்து இந்துக்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு மீது நம்பிக்கை வந்துள்ளது.
கொன்றது தவறுதான்
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசபக்தியை காட்டுகிறது. அதாவது பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் வைத்திருந்த தேச பக்தி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது தவறுதான்.
கடும் கண்டனம்
தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறார். அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடமாடவிட மாட்டோம்
அவர் இதுபோன்று சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. அதனால்தான் அவர் தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்.
ஐஎஸ் அமைப்பிடம் லஞ்சம்
கமல்ஹாசன் 'ஐஎஸ் இயக்கத்திடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்து விரோதத்தை பரப்புகிறார். கமல் நல்ல நடிகர். இந்து விரோத நடிப்பை சினிமாவில் காட்டுவதற்கு பதிலாக பொதுவில் காட்டிக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் மனு
கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்க கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம்.
திருப்பதியை விட அதிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி கோவிலை விட அதிகமான நகைகள் இருக்கிறது. அதனை முழுமையாக கணக்கிட வேண்டும். இவ்வாறு மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.