ஓட்டு போட்டாச்சு.. ஓட்டு சீட்டுக்கள் கிடப்பதோ ரோட்டோரம்..உள்ளாட்சி தேர்தலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருச்சி: பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு சீட்டுக்கள், சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் தேர்தல் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று கேள்விகளை எழுப்புவது அமைந்துவிட்டது.
பெரம்பலூர்-அரியலூர் நடுவேயான சாலையில், குன்னம் பகுதிக்கு அருகே சித்தளி மற்றும் ஒதியம் என்ற கிராமங்களுக்கு இடையே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் வாக்குச்சீட்டுகள் சிதறி கிடந்ததை சிலர் பார்த்தனர்.
அருகே சென்று அதை எடுத்து பார்த்த போது, குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் என்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறைக்கு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குன்னம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பகுதிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வாக்கு சீட்டுக்கள் அனைத்துமே மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டுகள் என்பது தெரிய வந்தது.
இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் வெறும் 17 ஓட்டுகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒருவேளை இந்த ஓட்டு சீட்டுகளையும் சேர்த்து வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தால் தேர்தல் முடிவு மாறியிருக்க வாய்ப்பு இருப்பது போல தெரிகிறது.
அமைச்சர் கடம்பூர் ராஜூவை வீழ்த்திய கடம்பூர் இளைய ஜமின்தார்... கயத்தாறு ஒன்றியம் அமமுக வசம்
எனவே இந்த விஷயத்தில் தேர்தல் அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை, ஆரம்பித்துள்ளனர். வாக்குச் சீட்டு முறையில், உள்ள பாதுகாப்பற்ற முறையை இது அம்பலப்படுத்துவது போல அமைந்துள்ளது.
தோல்வியடைந்த வேட்பாளர்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி முதலிடத்தையும், அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.