திமுக கூட்டணியில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை... கே.என்.நேரு திட்டவட்டம்..!
திருச்சி: திமுக கூட்டணியை பொறுத்தவரை விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் விரைந்து நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?
திருச்சியில் மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
திமுக கூட்டணி
அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பாமக, திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்றும் இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய பாதையை நோக்கி பயணிக்கக்கூடும் எனவும் கடந்த சில நாட்களாக அரசியல் ஆருடங்கள் உலா வருகின்றன. இதனிடையே திமுக கூட்டணியை மையமாக வைத்து பேசப்படும் விவகாரம் குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவிடம் திருச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
விரிசல் இல்லை
அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, திமுக கூட்டணியில் எப்போதும் விரிசல் ஏற்படாது என்றும் எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தேதியில் நிச்சயம் நடைபெறும் என்றும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதை எதிர்த்து அதிமுக நீதிமன்றத்துக்கு சென்றுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்புப்படி ஒரே கட்டமாகவோ அல்லது இரண்டு கட்டமாகவோ தேர்தல் நடத்தப்படும் எனக் கூறியிருக்கிறார்.
காவிரியில் பாலம்
மேலும், திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர் காவிரியில் புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அடுத்தபடியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டியிருப்பதால் அது தொடர்பான பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 82 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பகுதியளவு அடையப்பட்டுள்ளதாக கூறினார். திருச்சி மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.