அமைச்சருக்கும்-மாவட்டச் செயலாளருக்கும் பனிப்போர்...! திருச்சி அதிமுகவில் கலகக் குரல்
திருச்சி: கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரத்தில் அதிமுக திருச்சி மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர் வளர்மதிக்கும் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
திருச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், அமைச்சர் வளர்மதி தலையிட்டு தனது ஆதரவாளர்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்துமாறு கூட்டுறவு சங்க அதிகாரிகளை வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மாவட்டச்செயலாளர் பரிந்துரைத்த நபர்களை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
கூட்டுறவு தேர்தல்
திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கு மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதில் 18 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 3 உறுப்பினர்களை தேர்வு செய்வதில் மட்டும் கடும் போட்டி ஏற்பட்டது. அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலும், மாநகர் மாவட்டச்செயலாளர் குமாரும் ஒன்றியச்செயலாளர்கள் மூன்று பேரை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தனர்.
Exclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி
அதிகாரிகளுக்கு திட்டு
கூட்டுறவு சங்க அதிகாரிகளும் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களே கூறிவிட்டதால் எந்த சிக்கலும் ஏற்படாது என நினைத்த நிலையில், அமைச்சர் வளர்மதி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனது ஆதரவாளர்கள் மூன்று பேரை உறுப்பினராக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினாராம். இது தொடர்பாக அவரை சந்திக்க வந்த அதிகாரிகளை, அமைச்சர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினாராம்.
தலைமையிடம் புகார்
இதனால் கொதித்துப்போன மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேலும், குமாரும், இது குறித்த புகாரை கட்சி தலைமைக்கும், ஆட்சி தலைமைக்கும் கொண்டு சென்றுள்ளார்களாம். மேலும், சீனியர்கள் என்ற முறையிலும் முன்னாள் எம்.பி.க்கள் என்ற வகையிலும் மாவட்டச் செயலாளர்களுக்கு அமைச்சர் வளர்மதி உரிய மரியாதை தரவில்லை எனப் புகார் கூறுகின்றனர் திருச்சி அதிமுகவினர்.