அருமை.. கோயிலில் நடைபெற்ற அமைச்சர் வளர்மதி மகன் திருமணம்... எளிமையாக..!
திருச்சி: அமைச்சர் வளர்மதியின் மகன் திருமணம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பெருமாள் கோயிலில் எளிய முறையில் இன்று நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வளர்மதி. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்ற இவர் அமைச்சரவையில் இருப்பதே பலருக்கும் தெரியாது. அந்தளவிற்கு அமைதியானவர், எந்த புகாரிலும் சிக்காதவர். திருச்சியை மையமாக வைத்து அரசியல் செய்து வரும் இவர் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை கூட நிறைவேற்றிக் கொடுக்க கூடியவர்.
இந்நிலையில் இவரது இளைய மகன் ஹரிராமுக்கும் மருதாண்டாகுறிச்சியை சேர்ந்த சண்முகசுந்தரம் சந்திரா தம்பதி மகள் சூரியபிரபாவுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து இளைய மகனின் திருமணத்தை நடத்த அமைச்சர் வளர்மதி திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், மகன் திருமணத்தை மிக எளிமையாக நடத்த முடிவெடுத்தார் அமைச்சர் வளர்மதி. அதன்படி திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலுக்கு மணமக்களை அழைத்துச்சென்று அங்கு வைத்து திருமணத்தை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் வீட்டார் சார்பில் இருந்து இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதனிடையே மணமக்கள் ஹரிராம்-சூரியா பிரபா தம்பதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இதேபோல் மற்றொரு அமைச்சரான பெஞ்சமின் மகன் திருமணமும் எளிய முறையில் அவரது வீட்டிலேயே நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தனது ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை அழைத்து தனது மகன் திருமணத்தை ஒட்டி விருந்தளிக்கும் திட்டத்தில் இருக்கிறார் அமைச்சர் வளர்மதி.