அத்வானியை கழற்றிவிட்ட மோடி.. தவழ்ந்து சென்ற எடப்பாடி.. முசிறி கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு
திருச்சி: பெரம்பலூர் லோக்சபா தொகுதியில், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது: பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிவேந்தருக்கு நீங்கள் உதயசூரியனுக்கு ஆதரவு தந்து வாக்களிக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்கிறேன்.
ஆதரவு தருவீர்களா? தருவீர்களா? தருவீர்களா? (கூட்டத்திலிருந்து தருவோம் என சத்தம்). இன்னும் கொஞ்சம் சத்தமாக சொல்லவும்.
நாடு மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த 5 வருடங்களாக உங்கள் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவும், உங்கள் எதிர்காலம் ஒரு மோசமான சூழ்நிலைக்கு போயுள்ள நிலையில், உங்கள் உரிமைகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ள ஆபத்தான கட்டத்தில் உள்ளோம்.
இதில், தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய தவறு உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தவறானவர்களை தேர்ந்தெடுத்து அதன் காரணமாக தவறான மனிதர்கள் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு உள்ளனர்.
நரேந்திர மோடியோ, எடப்பாடி பழனிச்சாமி தவறான மனிதர்கள்தான். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, நடைபெற்ற படுகொலைகள், என்கவுண்டர் சம்பவங்கள் இன்றைக்கும் கரும்புள்ளியாக உள்ளன.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், நரேந்திர மோடி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் மோடி முதல்வராக பதவி வகிக்கட்டும் என்று சமாதானம் செய்து வைத்தவர் அத்வானி. இன்று அத்வானி எங்கே உள்ளார் என்று தேடிக் கொண்டிருக்கிறோம். மோடி தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், சுயநலத்திற்காகவும் எதையும் செய்யக்கூடியவர்.
எடப்பாடி பழனிச்சாமி பற்றி சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. அதற்கு ஆதாரங்களை நீங்கள் பலமுறை வாட்ஸ் அப்பில் பார்த்திருப்பீர்கள், ஃபேஸ்புக்கில் அல்லது தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். சசிகலா சிறை செல்லும் சூழல் வந்தபோது, விழுந்து அல்ல, தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பெற்றார். தவழ்ந்து சென்று பெற்ற பதவியை காப்பாற்ற, இப்போது மோடியின் கைகளை கால்களாக நினைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.