நண்பனுக்கு மரியாதை செலுத்த திருச்சி சென்ற ஸ்டாலின்..!
Recommended Video
திருச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நெருங்கிய நண்பர் அன்பில் பொய்யாமொழியின் 20-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில் ஸ்டாலினுடன் தமிழகம் முழுவதும் சென்று அந்த அணியை வளர்ச்சி அடைய செய்ததில் அன்பில் பொய்யாமொழியின் பங்கு அதிகம். அன்பில் தர்மலிங்கத்தின் மகனான அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினின் ஆருயிர் நண்பராக திகழ்ந்தவர்.
அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று திமுக பொருளாளராகவோ, அல்லது முக்கிய பதவிகளில் ஏதேனும் ஒன்றிலோ இருந்திருப்பார். அன்பில் பொய்யாமொழி நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சேலத்தில் இருந்து சென்னை திரும்பாமல் திருச்சிக்கு நேற்றிரவே சென்றுவிட்டார் ஸ்டாலின்.
நட்புக்கு மரியாதை
திருச்சி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும் ஸ்டாலின், தனது நண்பர் அன்பில் பொய்யாமொழியின் மறைவை நினைத்து இன்றும் அவ்வப்போது கண்கலங்குவார். திமுகவினரால் அன்பிலார் குடும்பம் என்றழைக்கப்படும் தர்மலிங்கத்தின் குடும்பத்துக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது.
அனுசரிப்பு குணம்
திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.செல்வராஜ் மதிமுக தொடங்கப்பட்டவுன் வைகோ பின் சென்றார். அப்போது திருச்சி மாவட்ட திமுக செயலாளர் பதவி கே.என்.நேருவுக்கு கிடைத்தது. ஆனால் அன்பில் பொய்யாமொழி நினைத்திருந்தால் தனது நண்பர் ஸ்டாலின் மூலமகாவோ அல்லது தனது தந்தை தர்மலிங்கத்தின் செல்வாக்கை வைத்தோ மாவட்டச் செயலாளர் ஆகியிருக்க முடியும்.
நல்ல பெயர்
ஆனால் அதனை தவிர்த்து பெரும்போக்காக நடந்துகொண்டு வாழ்நாளின் இறுதிவரை அனைவரையும் அனுசரித்து சென்றார். அந்த அனுசரிப்பு தான் இன்று அவரது மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கட்சியினரிடத்தில் நற்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
கிராப்பட்டி வீடு
திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தியாகராயர் நகரில் வசித்தாலும், தனது தந்தையின் நினைவுநாள், பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அவர் வாழ்ந்து மறைந்த திருச்சி கிராப்பட்டியில் உள்ள இல்லத்தில் தான் நடத்தி வருகிறார். சொந்தபந்தங்கள், தந்தையின் ஆரம்பகால ஆதரவாளர்கள் என அனைவரையும் அழைத்து மதிய விருந்தும் அளித்து உபசரித்துள்ளார்.