தமிழகத்திற்கு வரபிரசாதம்.. நடமாடும் நியாய விலைக்கடைகளின் சிறப்பு அம்சங்கள்.. என்னென்ன?
திருச்சி: தொலைதூர மற்றும் தொடர்புக்கு அப்பாலுள்ள மக்களை சென்றடையும் வகையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும். இத்திட்டப்படி மாதம் இரண்டு முறை வீட்டு வாசலுக்கே வந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு கைகொடுத்த விஷயம் என்றால் ரேஷன் கடைகள் தான். மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் நவம்பர் மாதம் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்தன.. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்க ஏதுவாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசியும் வழங்கப்படுகிறது. மேலும் நடமாடும் நியாய விலைக்கடைகள், தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
யாருக்கு நல்லது
தமிழ்நாட்டில் 3501 நடமாடும் நியாயவிலைக் கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். 9 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் மலைவாழ் மற்றும் தொலைதூரத்தில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 38 மாவட்டங்களில் உள்ள சுமார் 5 லட்சத்து 37 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்.
4 மாவட்டங்களில் அறிமுகம்
திருச்சி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூரில் உள்ள 277 கிராமங்களிலும், சென்னையில் 54 தெருக்களிலுமாக மொத்தம் 27 ஆயிரத்து 420 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் 2014-ம் ஆண்டு, 48 நடமாடும் நியாயவிலைக் கடைகளின் உதவியுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருந்தது..
எப்போது விநியோகம்
திருச்சியில் ஒரு நடமாடும் நியாயவிலைக் கடையை மாநில அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி கடந்த வியாழனன்று திறந்து வைத்தனர். இதன் மூலம் 120க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். மாதம் ஒருமுறை இந்த நடமாடும் நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும். தொலைதூரங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வியாழக்கிழமை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும். இந்த அசாத்திய சூழ்நிலையில் பொதுமக்களிடையே இத்திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை அடுத்து இந்த திட்டம் மேலும் விரிவடையவுள்ளது.
16ம் தேதி 6 மாவட்டங்களில்
இந்த மாதம் ஒன்றாம் தேதி சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலையில் இந்த திட்டம் வரும் 16ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இந்த திட்டப்படி எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.