ஆசை ஆசையாக கொள்ளு கஞ்சி வாங்கி குடித்த 50 பேருக்கு வாந்தி மயக்கம்
திருச்சி: கோயில் விழாவில் ஆசை ஆசையாக கொள்ளு கஞ்சி வாங்கி குடித்த 50 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்குமே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த திருமங்கலம் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வேண்டுதல் நிறைவேற அப்பகுதி மக்கள் சார்பில் விழா நடைபெறுவது வழக்கம்.
அப்படித்தான் இந்த வருஷமும் கோயிலில் கடந்த 3 நாட்களாக விசேஷம் நடந்து வருகிறது.
இதனால் மதியானம், இரவு ஆகிய 2 நேரங்களில் கொள்ளு கஞ்சி தரப்பட்டு வந்தது. இதுபோக வெயில் காலம் என்பதால், இளநீர், நீர் மோர், பானகம் போன்றவையும் கொடுக்கப்பட்டு வந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை.. சேலத்தில் பரபரப்பு
கொள்ளு கஞ்சி
இதனை, கிட்டத்தட்ட ஏராளமானோர் வாங்கி குடித்தனர். அதிலும் கொள்ளு கஞ்சியை 50-க்கும் மேற்பட்டோர் ஆசையாக வாங்கி குடித்துவிட்டு, அவரவர்கள் வீட்டுக்கு திரும்பிவிட்டார்கள். இந்நிலையில், கொள்ளு கஞ்சி குடித்தவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழ ஆரம்பித்துள்ளனர்.
உடனடி சிகிச்சை
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கொள்ளு கஞ்சி குடித்த அனைவருக்குமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் சித்ரா
தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சித்ரா விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதைபற்றி சொல்லும்போது, கோவில் திருவிழாக்களில் அன்னதானம், கஞ்சி, தரும்போது முறையாக வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் தெரியப்படுத்தி ஆய்வு செய்த பிறகுதான் வினியோகிக்க வேண்டும்.
அறிவுரை
சுத்தம் செய்யப்படாத பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது, காலாவதியான உணவு பொருட்களை வைத்து சமைக்க கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து கோயிலில் கொள்ளு கஞ்சி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.