ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு.. மே மாத உண்டியல் காணிக்கை ரூ. 77.82 லட்சம்
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்கு மே மாதம் உண்டியல் காணிக்கையாக, ரூ. 77.82 லட்சம் வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது எழில்மிகு அரங்கநாத சுவாமி கோயில். இது அருள்மிகு ரெங்கநாதர் கோவில் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம் இந்த கோயில் ஆகும்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவு போன்ற பகுதியில், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம் என்னும் ஊர். இது 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரமாக திகழ்கிறது. இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு!
இதில் மிகப் பெரிய ராஜகோபுரம் 220 அடி உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-ல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது.
இக்கோயிலுக்கு வருடம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கதான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டே இருப்பர். இந்நிலையில் இக்கோயிலின் மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அங்குள்ள கருடாழ்வார் சன்னதியில் நடைபெற்றது. இப்பணி கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்டது.
இப்பணியில் ஐயப்பா சேவாசங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முடிவில் ரொக்கமாக ரூ.77,82,429 காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த தொகை கடந்த மாதத்தை விட ரூ. 30 லட்சம் கூடுதல் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் உண்டியல் காணிக்கை தொகையும் கூடுதலாக வந்துள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும் உண்டியலில் தங்கம் 177 கிராம், வெள்ளி 1131 கிராம், 166 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இதே போல திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் மற்றொரு கோயிலான சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியும் நடைபெற்றது. உண்டியல் காணிக்கையை கோயிலின் மண்டபத்தில் வைத்து தன்னார்வலர்கள் எண்ணினர். இறுதியாக ரூ 49 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் காணிக்கையாக வந்துள்ளது தெரிய வந்தது.
மேலும் 1 கிலோ 472 கிராம் தங்கம், 6 கிலோ 223 கிராம் வெள்ளி, 78 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாக வந்துள்ளதாகவும், சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.