போலீசுக்கு சவால்... திருச்சி வங்கியில் கொள்ளை முயற்சி... மர்மநபர்கள் அட்டகாசம்
திருச்சி: சமயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6½ கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது.
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை சமயபுரம் கடைவீதியில் இருந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ளது.
இங்கு சமயபுரம், வே.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
கொள்ளை முயற்சி
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த அலாரம் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமராவிற்கு செல்லும் மின் வயர்களை துண்டித்தனர். மேலும் உள்ளே இருந்த அனைத்து கேமராக்களின் கண்ணாடிகளில் குங்குமத்தை தூவி உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வருகை
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றதை அறிந்து, வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருந்த பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் நகை என்ன ஆனதோ? என்ற பதற்றத்துடன் வரத்தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஜன்னல் பலவீனம்
கொள்ளை முயற்சி குறித்து போலீசார் கூறுகையில், வங்கியில் உள்ள அனைத்து பகுதிகளையும் நன்கு அறிந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு, வங்கிக்கு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம். இந்த சம்பவத்தில் 2 அல்லது 3 பேர் ஈடுபட்டிருக்கலாம். வங்கியின் ஜன்னல் பலவீனமாக இருந்ததால் அதை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள், என்று தெரிவித்தனர்.
போலீசுக்கு சவால்
இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுகனூர் அருகே வனப்பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை குத்திக்கொன்ற நபர்கள், அவருடைய காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது போலீசுக்கு சவால்விடும் வகையில் உள்ளது.