திருச்சியில் வங்கியில் ரூ.5 கோடி நகை கொள்ளை.. கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்கள் உடைப்பு
Recommended Video
திருச்சி:திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளா்களின் லாக்கரை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் அருகே உள்ள நம்பா் 1 டோல்கேட் பகுதியில் பஞசாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறையை தொடா்ந்து பணியாளா்கள் இன்று மீண்டும் வேலைக்கு வந்துள்ளனா். அப்போது வெளிப்புறத்தில் வங்கி வழக்கம் போல் காட்சியளித்துள்ளது.
கதவை திறந்து வங்கியினுள் சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கியின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனா். இதனைத் தொடா்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
போலீசார் மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தினர். 5 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. வங்கியின் பின்புறம் உள்ள பள்ளியின் சுவர் வழியாக ஓட்டை போட்டு, வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் மூலம் லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையர்கள் நுழைந்தபோது வங்கியில் உள்ள அலாரம் ஒலிக்கவில்லை. எனவே, அலாரத்தின் மின் இணைப்பை கொள்ளையர்கள் துண்டித்திருக்கலாம் என்று கூறப் படுகிறது. வங்கியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இது தொடர்பாக, போலீசார் கூறுகையில், உடைக்கப்பட்டவை அனைத்தும் வாடிக்கையாளா்களின் லாக்கா் தான். மேலும் வங்கியின் முக்கிய லாக்கா் உடைக்கப்படவில்லை என்று கூறினர்.
வாடிக்கையாளா்களின் லாக்கா்கள் உடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ள நிலையில் தங்கள் லாக்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வங்கி வாடிக்கையாளா்கள் வங்கி முன்பு குவிந்தனா். அதை தொடர்ந்து, வங்கி விடுமுறை என்ற பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முதல் கட்டமாக, வங்கியில் உடைக்கப்பட்ட லாக்கர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதன்படி 114, 299, 300, 39. 223 ஆகிய எண்கள் கொண்ட லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வங்கியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்பொருள் அங்காடியிலும் கொள்ளை நிகழ்ந்துள்ளது. இவ்விரு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் நிகழ்த்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக திருச்சியின் 3 இடங்களில் வங்கிகளில் கொள்ளை நடந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவரும் நிலையில், போலீசாருக்கு சவால் விடுவது போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய கொள்ளையை நடத்தி உள்ளனர்.
இந்த வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த 2013 ஆண்டு ரூ.25 லட்சம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.