நிபா வைரஸ் அச்சம்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
திருச்சி: நிபா வைரஸ் தாக்காமல் இருக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிபா வைரசால் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பி, கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதே நேரம், நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு, வெட்டு, குத்து கொலைகள்.. பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் மோதலால் மே.வங்கத்தில் பதற்றம்
நிபா அறிகுறிகள் என்ன எனக்கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். வெளி மாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்; கழுவாத காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்; கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளத என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
மேலும், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் அல்லாமல் நேரடியாகவே நடைபெறும். ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் 4 நாட்கள் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.