என்னங்கப்பா இது.. "நித்தி செம ஜாலி.. நோ சூடு நோ சொரணை.. ரொம்ப பிடிச்சிருக்கு".. லால்குடியில் கலகல!
திருச்சி: "நோ சூடு நோ சொரணை'ன்னு சொன்னாரு பாருங்க.. அதான்.. அதுதான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நாங்களும் அப்படித்தான். எங்களுக்கும் சூடு சொரணை கிடையாது.. செம ஜாலி டைப் தெரியுமா அவரு.. எதை பத்தியும் கவலைப்பட மாட்டாரு" என்று நித்யானந்தாவை புகழ்ந்து தள்ளுகிறார்கள் லால்குடி இளசுகள்!!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து உள்ளது பல்லவபுரம் என்ற கிராமம்... இங்கு வசித்து வருபவர் இளவரசன்.. இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருந்தனர்.
மணப்பெண் பெயர் விஜி.. நேற்றுதான் கல்யாணம். தம்பதி மணமக்கள் இருவருமே லால்குடியை சேர்ந்தவர்கள் என்பதால், கல்யாணமும் அங்குதான் நடந்தது.
மணமக்கள்
இந்த திருமணத்தில் ஹைலைட்டே.. இவர்கள் வைத்திருந்த பேனர்கள்தான்.. பொதுவாக மணமக்களை வாழ்த்தி பேனர் வைக்கும்போது, அதில் உறவினர்கள், அல்லது நண்பர்கள் படம், பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.. ஒருவேளை கட்சி சம்பந்தப்பட்டவர் திருமணம் என்றால் நிர்வாகிகள் பெயர்கள், போட்டோக்களும், அல்லது நடிகர்களின் போட்டோக்களும் இடம்பெற்றிருக்கும்.
பளிச் சிரிப்பு
ஆனால் இந்த கல்யாணத்தில் உறவுகள், நண்பர்களைவிட முக்கியத்துவம் பெற்றிருந்தது நம்ம நித்யானந்தாதான். பிளக்ஸ் பேனரில் நித்தியானந்தா போட்டோ இருந்தது.. வழக்கமான அதே சிரிப்பில்தான் உடம்பெல்லாம் நகையுடன் காணப்பட்டார் சாமியார் நித்தி.. பக்கத்துலயே பளிச்சென அந்த வாசகம்.. ‘நோ சூடு நோ சொரணை'!!!
வைரல் பேனர்கள்
கல்யாணத்துக்கு வந்தவர்கள், பொண்ணு, மாப்பிள்ளையைவிட இந்த பிளக்ஸ் பேனரைதான் ஆவென பார்த்து கொண்டு நகர்ந்தனர்.. இது நண்பர்களின் ஐடியா போலும்.. இதை பற்றி பேனர் வைத்தவர்களிடமே கேட்டதற்கு, "நித்தியானந்தாதான் இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.. ஃபேஸ்புக், சோஷியல் மீடியா முழுசும் இவர் வீடியோதான் வைரலாகிறது.
ரொம்ப பிடிச்சிருக்கு
அதனால்தான் அவருடைய போட்டோவை வைத்து பேனர் அடிச்சோம்.. நித்தியானந்தா வித்தியாசமா இருக்கிறார்.. அவர் பேச்சு வித்தியாசமாக இருக்கு.. அவரை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எதை பத்தியும் கவலைப்படாதவர்.. ஜாலியா இருக்கார்.. அவர் கொள்கை எங்களுக்கு பிடிச்சிருக்கு.. என்ன தோணுதோ அதைதான் பேசுவாரு.. முக்கியமா நோ சூடு, நோ சொரணைன்னு சொன்னாரு பாருங்க.. அதுதான் எங்களுக்கு பிடிச்சிருக்கு.
கிளம்பிடுவோம்
அப்படித்தான் நாங்களும்.. எங்களை யார் என்ன சொன்னாலும், திட்டினாலும் கண்டுக்கவே மாட்டோம்.. அவர் கைலாசத்தில் இருக்கிறார்ன்னு சொல்றார், ஆனா அது எங்கே இருக்குன்னுதான் தெரியல.. தெரிந்தால் நாங்களும் கிளம்பிடுவோம்.. அப்படி ஒரு நாடு இருக்குன்னா, அதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த போஸ்டர் அடித்தோம்" என்கிறார்கள்.
ரைட்டு... முத்திடுத்து... கலி முத்தி போயிடுத்து!!!