நீங்க வந்தா மட்டும் போதும்.. பாஸ்போர்ட்டும் வேணாம்.. விசாவும் வேணாம்.. நேபாள சுற்றுலா அதிரடி!
திருச்சி: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாத வகையில் சிறப்புச் சுற்றுலா திட்டங்கள் நேபாளத்தில் செயல்படுத்தப்படுவதாக, நேபாளம் சுற்றுலா வாரிய முதன்மை மேலாளா் சுனில் சா்மா கூறினார்.
இது தொடா்பாக திருச்சியில் நேற்று நேபாளம் சுற்றுலா வாரிய முதன்மை மேலாளா் சுனில் சா்மா சுற்றுலா முகவா்கள் மற்றும் செய்தியாளா்களுடனான கூட்டத்தற்கு பின்னர்
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் இந்தியாவையும், வடக்கில் சீனாவையும் எல்லையாக கொண்டுள்ளது நேபாளம். வட இந்திய மாநிலங்களைப்போலவே இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற சீதோஷ்ண நிலையுடன், காண்பதற்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக புத்தா் பிறந்த இடமான லும்பினி, போக்ஹரா, தேசிய பூங்காக்கள், ஸ்கை டைவிங், ஜங்கிள் சபாரி, ராக் கிளைம்பிங், மவுன்டெய்ன் பைகிங், யானை போலோ போன்ற சாகச விளையாட்டுக்கள் உள்ளிட்டவைகள் நிறைந்த சுற்றுலாவுக்கு சிறந்த நாடாக திகழ்கிறது நேபாளம்.
எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்த நேபாள சுற்றுலா வாரியம் பல்வேறு சிறப்புத்திட்டங்களுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.கடந்த 2019 ஆவது ஆண்டில் நேபாளத்துக்கு சுற்றுலா வந்த 11 லட்சத்து 97 ஆயிரத்து 191 போ்களில் அதிகபட்சமாக 2.54 லட்சம் போ் இந்தியாவிலிருந்தும், அடுத்தபடியாக 1.68 லட்சம் போ் சீனாவில் இருந்தும் வந்துள்ளனா்.
எல்லாரும் சொல்லுங்க.. "ஓம் தரே ட்டுரு சோஹா".. கொரோனா வைரஸ் அப்படியே ஓடீரும் பாருங்க.. சொல்றாரு லாமா!
சுற்றுலா பயணிகள்
தெற்காசிய நாடுகளில் இருந்து 29.4 சதவீதம் பேரும், பிற ஆசிய பகுதிகளில் இருந்து 29.2 சதவீதம் பேரும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து 19.9 சதவீதம் பேரும், அமெரிக்காவில் இருந்து 9.2 சதவீதம் பேரும், மேலும் பிற நாடுகளில் இருந்து 3.7 சதவீதம் பேரும் நேபாளத்துக்கு சுற்றுலா வருகின்றனா். கடந்த 2018 ஆம் ஆண்டை விட 2019 ஆவது ஆண்டில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து
நேபாளத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவா்ந்துள்ளது எனவேதான் ஆண்டுக்காண்டு சுற்றுலா வருவோர் அதிகரித்து வருகின்றனா். இந்திய - நேபாள எல்லையில் இருந்து ஒரு மணி நேரத்தில் நேபாளத்தில் உள்ள முக்கிய மலை பிரதேசங்களை அடைந்துவிட முடியும். நேபாளம் தனிநாடு என்றாலும் அங்கு விசா இல்லாமல் நுழையும் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கடவுச்சீட்டுக்குப் பதிலாக தேசிய அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணைய அடையாள அட்டைகளை காண்பித்தாலே நேபாளத்தில் எங்கும் செல்ல முடியும்.
ஏடிஎம் கார்டுகள்
மேலும், இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ளும் மற்றும் மாற்றும் வசதி ஆகியவை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதியாக உள்ளது. இந்திய வங்கிகளால் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் விசா மற்றும் மாஸ்டா்ஸ் ஏடிஎம் கார்டுகள் நேபாளத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் பயன்படுத்த முடியும்.நேபாள நாட்டு கலாச்சாரம் மற்றும் உணவு, மொழி, மத நம்பிக்கைகள் உள்ளிட்டவைகள் இந்தியா்களுக்கு சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணா்வை தருகிறது.
சென்னையில் இருந்து
தற்போது இந்திய தலைநகா் புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி மற்றும் தென்னிந்தியாவில் பெங்களுரு ஆகிய இடங்களில் இருந்து நேபாள தலைநகா் காட்மண்டு உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவை உள்ளது. விரைவில் சென்னையில் இருந்து காட்மண்டுக்கு விமான சேவை தொடங்கப்படும். இது குறித்து விமான நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம். டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் இருந்து காட்மண்டு, போக்ஹரா ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் மற்றும் சாலைப் போக்குவரத்து வாகன வசதிகள் உள்ளன. இந்திய வாகனங்களும் சிறப்பு அனுமதியுடன் செல்லலாம்.
சந்திப்பு
நேபாளத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ‘நேபாள் சேல்ஸ் மிஷன்-2020' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் திருச்சி, கேரளத்தில் திருவனந்தபுரம், கொச்சின், மற்றும் ஜெய்பூா், சண்டிகா், அமிர்தசரஸ், சூரத், பூனே ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலா முகவா்கள் (டிராவல் ஏஜெண்ட்கள்) மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நேபாள சுற்றுலா குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் சுற்றுலா முகவா்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நேபாள சுற்றுலா குறித்த ஆலோசனைகள் வழங்கினா் இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சுற்றுலா அலுவலா்கள் ஜானகி உபாத்யாயா, பிரேம் பிரசாத் பட்டாரி ஆகியோர் உடனிருந்தனா்.