ஏசி வேலை செய்யல.. விமானத்தை எடுக்கல.. திருச்சியில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
என்ன விமானம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிங்கப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 115 பயணிகள் அமர்ந்திருந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட தயரானது. ஏர்பிரான் பகுதியில் இருந்து ரன்வே பகுதிக்கு சென்று விமானம் வேகம் எடுத்து மேலே எழும்புவதற்கு தயாராகி இருந்தது.
ஆனால் என்ன
ஆனால் புறப்படுவதற்கு சில நிமிடத்திற்கு முன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை பைலட் கண்டறிந்தார். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு குறித்து பைலட் விமானநிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக விமானத்தை திருப்பி ஓட்டி வந்து ஏர்பிரான் பகுதியில் நிறுத்தினார். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டனர்.
பிரச்சனை என்ன
அப்போது விமானத்தில் பயணிகளின் கேபின் பகுதியில் ஏசி இயந்திரம் பழுதாகியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பயணம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
எதனால் எடுக்கவில்லை
திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல 4.30 மணி நேரம் ஆகும். அதுவரை ஏசி இயங்காமல் சென்றால் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் பயணிகள் மூச்சுதிணறல் உள்ளிட்ட உடல் உபாதைக்கு ஆளாகியிருப்பார்கள். பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். 2 நாளுக்கு முன்பு திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவர் மீது துபாய் புறப்பட்ட விமானம் உரசியபடி சென்ற சம்பவம் பற்றிய விசாரணை தீவிரமாக நடக்கும் நிலையில் இச்சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் சம்பவம்
இதேபோல் கடந்த மாதம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தினுள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கேபின் காற்றழுத்தம் குறைந்ததால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்தது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.