நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. ஆ.ராசா எச்சரிக்கை
திருச்சி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் அவர் திமுக கூட்டணி வேட்பாளரான ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஆ.ராசா பேசுகையில், மோடி ஆட்சியில், ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்ட இந்தியாவின் அடிப்படைத்தன்மைகளுக்கு ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவாவுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னால் கொல்கிறார்கள்.
பகுத்தறிவாளர்களான கவுரி லங்கேஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் உள்ளிட்டோர் இவர்களால் கொல்லப்பட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவன பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மூடி வருகிறார்கள். ஊட்டியில் மூடப்பட்ட இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை புதுப்பிக்க காங்கிரஸ் ஆட்சியில் பெற்றுக் கொடுத்த ரூ.300 கோடியும் முழுங்கப்பட்டுவிட்டது.
"திமுக, அண்ணா திமுகவுக்கு ஓட்டுப் போடாதீங்க"... அடடா.. பழக்க தோஷத்துல தப்பாக பேசிய ராமதாஸ்!
இதே நிலை நீடித்தால் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தையும் தனியாருக்கு கொடுத்துவிடுவார்கள். சுயாட்சி அமைப்புகளை நாசம் செய்துவிட்டார்கள். எனவே, நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தலாக அமையலாம். ஏனெனில் அரசியல் சட்டத்தை மதிக்காமல், அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவார்.
பாகிஸ்தானில் என்ன நிலைமையோ அதுதான் இங்கும் ஏற்படும். ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி. வன்னியர்கள் உட்பட பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வந்ததற்குக் காரணம் அம்பேத்கர். அதை ராமதாசும் உணர்ந்துள்ளார். எனவேதான், 100 அம்பேத்கர் சிலைகளை ராமதாஸ் நிறுவினார். ஆனால், பணம், பதவி அவர் கண்களை இப்போது மறைத்துவிட்டது. இவ்வாறு ராசா பேசினார்.