சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து ஓராண்டு நிறைவு... உள்ளத்தை உறைய வைத்த நிகழ்வு ரீவைண்ட்..!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது பாலகன் சுஜித்தை ஆழ்துளை கிணறு விழுங்கி ஓராண்டு உருண்டோடி விட்டது.
சுஜித் மரணப்போராட்டத்தில் இருந்த போது அம்மா என்றழைத்த கடைசி குரல் காற்றில் கலந்து ஒட்டுமொத்த தேசத்தையும் நடுக்காட்டுப்பட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.
உள்ளத்தை உறைய வைத்த அந்த நிகழ்வின் ரீவைண்ட் இதோ;
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ். கொத்தனார் வேலை பார்த்து வரும் இவர் தனது தோட்டத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி மாலை சுமார் 5 மணியிருக்கும் போது, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். பிள்ளையை காணவில்லை என தேடிய தாய் கலாமேரிக்கு சுஜித் 5 அடி ஆழத்தில் இருந்து எழுப்பிய அழுகுரல் அவரை அங்கு கொண்டு சேர்த்தது.
நவீன கருவிகள்
தொடக்கத்தில் 5 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் அடுத்து 8 அடி வரை சென்றார். மணப்பாறை தீயணைப்பு படை வீரர்கள் சுஜித்தை மீட்க போராடி வந்த சூழலில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட நிர்வாகமும் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டது. சிறுவனை மீட்க மதுரையில் இருந்து அதிவிரைவாக நவீன கருவிகள் எல்லாம் கொண்டுவரப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 8 அடியில் இருந்த சுஜித் 88 அடிக்கு சென்றது தான் மிச்சம்.
3 நாட்கள் முகாம்
ஆழ்துளை கிணறு வழியாக சுஜித்தை மீட்க ஒரு குழுவினர் போராடிய நிலையில், நேரம் கடந்துகொண்டிருந்ததால் ரிக் வாகனங்கள் மூலம் அருகாமையில் பெரிய ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலமும் மீட்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை மணப்பாறைக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் 3 நாட்கள் அங்கேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை கவனித்து வந்தார்.
மக்கள் பிரார்த்தனை
கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை என்றாலும் கூட மக்கள் பெரியளவில் கொண்டாட்டங்களை தவிர்த்து சிறுவன் சுஜித்தை மீட்க வேண்டி பிரார்தனைகள் செய்து வந்தனர். 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுஜித் அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
மக்கள் அதிர்ச்சி
சுஜித் எப்படியும் மீட்கப்பட்டுவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காலையில் தொலைக்காட்சியை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அதிகாலை 2 மணிக்கு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித் காலை 6.30 மணிக்கெல்லாம் எல்லா சடங்குகளும் முடித்து அடக்கம் செய்யப்பட்டார். சுஜித்தை விழுங்கிக் கொண்ட ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலைவை கொண்டு திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் அடைக்கப்பட்டது.
என்ன நடவடிக்கை?
சுஜித் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு தரப்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் செய்தனர். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அந்த நடவடிக்கைகள் எல்லாம் அடுத்த 3 மாதங்கள் வரை மட்டுமே பரபரத்தன. இது போன்ற விபத்துக்களில் சிக்குபவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான கருவிகளை கண்டறிய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
கர்ப்பம்
சுஜித்தை விழுங்கிக் கொண்ட ஆழ்துளை கிணறு அருகே கொய்யாமரம் நட்டு வளர்த்து வருகின்றனர் அவரது பெற்றோர். இதனிடையே சுஜித்தின் தாய் கலாமேரி கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு வரும் டிசம்பர் மாதம் பேறு காலம் நடைபெறவுள்ளது. அப்போது மீண்டும் சுஜித் தங்கள் மகனாக பிறப்பான் என்ற நம்பிக்கையில் உள்ளனர் பிரிட்டோ-கலாமேரி தம்பதியினர்.