திருச்சியிலும் சுழற்றியடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினை.. குழு அமைத்து வாட்டர் சப்ளை செய்யும் மாநகராட்சி
திருச்சி: குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க, திருச்சி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநகர ஆணையர் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக நடப்பாண்டில் தமிழகமே தண்ணீர் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது. ஒரு புறம் மாநிலம் முழுவதையும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. மாநிலத்தின் சில பகுதிகளை தவிர பெரும்பாலான மாவட்டங்கள் வெயிலால் தகித்து வருகின்றன.
மறுபுறம் தமிழத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் என அனைத்து நீர் ஆதாரங்களும் பெரும்பாலும் வற்றி விட்டன. இதனால் காவிரி கரைபுரண்டோடும் திருச்சி உள்ளிட்ட, பல டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணத தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியுள்ளன.
தமிழக அரசு அறிவுறுத்தல்
இந்நிலையில் திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில் திருச்சி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தினந்தோறும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் திட்டங்கள் செயலாக்கத் துறை ஆகியவற்றை அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
சிறப்பு கண்காணிப்பு குழு
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளில், குடிநீர் பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றும் வகையில், நகரப் பொறியாளர் மற்றும் நகர்நல அலுவலர் தலைமையில், செயற்பொறிளார்கள், உதவிச் செயற்பொறியாளர்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன்.
வார்டுக்கு ஒருவர் நியமனம்
வார்டு ஒன்றிற்கு ஒருவர் வீதம் 65 வார்டுகளுக்கும் 65 நபர்கள் அடங்கிய கள ஆய்வு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வு குழுவினரின் மூலம் மக்களின் குடிநீர் தேவைகள் தொடர்பான குறைகள் உடனுக்குடன் விரைந்து சரி செய்யப்படும். இந்த சிறப்பு கண்காணிப்பு குழுவினருக்கு, பொதுமக்களின் குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று இப்பணிகளில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு குழுவில் யாருக்கு இடம்
திருச்சி மாநகர மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காணிப்பு குழுவில் உதவி பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகார் எண்கள் அறிவிப்பு
திருச்சி மாகர மக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்ட தொடர்பு எண்கள் : ஸ்ரீரங்கம்கோட்டம் 0431 -2432255, அரியமங்கலம் 0431- 2467615, பொன்மலை 0431- 2319844, கோ-அபிசேகபுரம் 0431- 2772098.
மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
இதனிடையே பொன்மலை கோட்டத்திலுல்ள 37 ஆவது வார்டு, காமராஜர்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்ததிரன், உதவிச் செயற்பொறியாளர் ரவீந்திரனுடன், குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்களிடம் பேசிய ஆணையர் ரவிச்சந்ததிரன் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கூறினார். குடிநீரை மாற்று பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார்