ஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை
திருச்சி வந்த விமானத்தில் பயணி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
திருச்சி: ராமச்சந்திரன் தூங்கி கொண்டு இருக்கிறார் என்றுதான் முதலில் எல்லோருமே நினைத்தார்கள்.. ஆனால் கிட்ட போய் பார்த்த பிறகுதான் ஷாக் ஆனார்கள்!
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணி திடீரென உயிரிழந்தார். இதனால் பயணியின் உறவினர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேத்து ராத்திரி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டம், காக்கூர் கிராமம் ராசிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடம் ஏறி உட்கார்ந்தார்.
மலேசியா
இவருக்கு கல்யாணம் ஆக 2 மகன்கள் உள்ளனர். மலேசியாவில் ஒரு ஓட்டலில் 12 வருடமாக வேலை பார்த்து வருகிறார். 2017-ல் ஊருக்கு வந்துவிட்டு போய், திரும்பவும் இப்பதான் வருகிறார். வயசு 31.
டாக்டர்கள்
திருச்சி ஏர்போட்டும் வந்துவிட்டது. எல்லாரும் இறங்கி போய்ட்டாங்க.. ஆனால் ராமச்சந்திரன் மட்டும் அவரது சீட்டிலேயே கண்மூடி உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த பணிபெண்கள், அவர் தூங்கிறார் போல இருக்கு, என்று எழுப்பிவிட வந்தனர். ஆனால் ஒரு உணர்வும் இல்லை.. தட்டி தட்டிபார்த்த அவர்கள், உடனடியாக ஏர்போர்ட் டாக்டர்களுக்கு தகவல் சொன்னார்கள்.
ஆம்புலன்ஸ்
விரைந்து வந்த டாக்டர்கள் உடம்பு ரொம்ப மோசமாயிருப்பதாகவும், உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டும் என்றும் சொன்னார்கள். அதன்படியே ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக ராமச்சந்திரனை விமானத்தில் இருந்து இறக்கிய போது மரணமடைந்தார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
போராட்டம்
இது சம்பந்தமாக ராமச்சந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறி அடித்து கொண்டு வந்த அவர்கள், ராமச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர். "விமான பணிப்பெண்கள் சரியாக கவனிக்கவில்லை, அதனால்தான், விமானத்தில் வரும் போதே ராமச்சந்திரன் இறந்துவிட்டார், இழப்பீடாக காப்பீடு தொகை வழங்க வேண்டும்" என்று சொல்லி உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விசாரணை
ராமச்சந்திரன் விமானத்தில் ஏறும்போதே இருமல் இருந்திருக்கிறது. விமானத்தில்கூட இருமிக்கொண்டே இருந்துள்ளார். திடீரென்று அவர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது மர்ம காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.