போலியான முகவரி கொடுத்து தப்பும் மக்கள்.. இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்
திருச்சி: போலியான முகவரியை கொடுத்து பலர் குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனி கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது தான் ஒரே வழி என்று அரசு தீவிரம் காட்டி வருகிறது. தினமும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செயயப்படுகிறது. நாள்தோறும் சுமார் 3900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழத்தில் சென்னைக்கு அடுத்தபபடியாக வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் அதிகம் வந்து இறங்குவது திருச்சியில் தான். இங்கு இதுவரை 25,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு முகவரிகள், தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு, பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானதும் தகவல் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா அறிகுறியோடு சளி மாதிரி சோதனைக்கு வரும் சிலர் தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பயந்து போலியான முகவரிகளை கொடுத்துவிட்டு தப்பி விடுகிறார்கள். போலியான முகவரி, செல்போன் எண் கொடுத்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களை திருச்சி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
லாக்டவுனால் திருச்சியில் வெறிச்சோடிய சாலைகள் - கொரோனா சிகிச்சையில் இருந்து 26 பேர் மீண்டனர்
இந்நிலையில் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் பரிசோதனைக்கு வரும் நபரின் ஆதார் அட்டை எண் மற்றும் நகல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தற்போது 350-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும் ஏராளமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.