முதலில் ஸ்டெல்லா,2வது வாணி, 3வது மீனா.. 4வதாக சுமதி.. கல்யாண மன்னன் கார்த்திக்.. கம்பி எண்ணுகிறார்!
திருச்சி: மூன்று பெண்களுடன் ஏற்கனவே நடந்த கல்யாணங்களை மறைத்து 4வதாக தேனி பெண்ணை மணந்த திருச்சி போலீஸ்காரரின் மகன் கார்த்திக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். திருச்சி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் (வயது 26). தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்- இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகள் சுமதிக்கும்(20) கடந்த 2019 பிப்ரவரியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் இருவரும் திருவெறும்பூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்தின்போது, சுமதிக்கு 16 பவுன் நகை பெற்றோர் போட்டுள்ளனர். நகைகள் அனைத்தையும், விற்று கார்த்திக் செலவு செய்திருக்கிறார். இதனிடையே சுமதி கர்ப்பமானார் அதை கார்த்திக் கலைக்க சொல்லியிருக்கிறார். இதனால் கலைத்துவிட்டார். இப்படியே மூன்று முறை கர்ப்பம் தரித்தும் அதை கார்த்திக் சொன்னதால் சுமதி கலைத்துவிட்டார்.
பெண்களுடன் தொடர்பு
நகையை அடகு வைத்த விவகாரத்தில் கணவன்-மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கணவனின் நடவடிக்கையில் சுமதிக்கு சந்தேகம் வந்தது. சுமதி, கணவர் கார்த்திக்கின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் மேலும் சில பெண்களுடன் கார்த்திக் இருப்பதை கண்டுபிடித்தார்.
2 குழந்தைகள் உள்ளனர்
இதுப்ற்றி கார்த்திக்கிடம் கேட்டபோது, மேலும் 3 பெண்களுடன் திருமணம் நடந்த விஷயம் வெளியே வந்துள்ளது. 6 வருடங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லாவை மணந்து இருக்கிறார். பெற்றோர் ஏற்பாட்டில் நடந்தது இந்த ஒரு திருமணம் மட்டுமே. இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். அதன்பின்னர் நண்பர்களுடன் இணைந்து சென்று பெண் கேட்டு 3 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்திருக்கிறார்.
கடைசியில் சுமதி
இரண்டாவதாக, சென்னையை சேர்ந்த வாணி, 3வதாக மீனா ஆகியோரை மணந்துள்ளார். வாணிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது . இந்த விஷயங்கள் தெரிந்தது சுமதியும், அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுமதி பெற்றோருடன் இணைந்து போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அங்கிருந்து திருச்சி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது.
சுமதி மட்டும் புகார்
வழக்கை விசாரித்த போலீசார், கார்த்திக்கை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதுபற்றி போலீசார் கூறும் போது, ‘கார்த்திக் பணம், நகைக்கு ஆசைப்பட்டு 4 பேரை திருமணம் செய்திருக்கிறார். ஏற்கனவே திருமணமான 3 பெண்களும் கார்த்திக்குடன் தொடர்பில் இல்லை. அவர்கள் கார்த்திக் மீது புகாரும் தரவில்லை. இப்போது சுமதி மட்டும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள்.
வலையில் வீழ்த்திய கார்த்திக்
4வது மனைவி சுமதியை கார்த்திக்கின் நண்பருக்குதான் முதலில் பெண் பார்த்திருக்கிறார்கள். அப்போது நண்பருடன் சென்ற கார்த்திக், சுமதியுடன் பழகி அவரை தன் வலையில் வீழ்த்தி இருக்கிறாராம்.. பின்னர் சுமதியின் பெற்றோர் உதவியுடனே அவரை திருமணம் செய்திருக்கிறார்.. திருமணத்தின்போது, உங்கள் பெற்றோர் ஏன் வரவில்லை என்று சுமதி வீட்டார் கார்த்திக்கிடம் கேட்டபோது, இந்த திருமணத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று சமாளித்திருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.